நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஜெயலலிதாவின் வரி பாக்கியைச் செலுத்தாவிட்டால் அவரது சொத்துகள் ஏலம் விடப்படும்: வருமான வரித் துறை 

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி நிலுவையை வட்டியுடன் சோ்த்து ரூ.20 கோடி செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி நிலுவையைச் செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்தது. எனவே, ஜெயலலிதாவின் வருமான வரி நிலுவைத் தொகையான ரூ.36.56 கோடியை 7 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று இருவருக்கும் வருமான வரித் துறை கடந்த ஜூலை 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, நோட்டீஸை திரும்பப் பெற்ற வருமான வரித் துறை, வருமான வரி நிலுவைத் தொகையை ரூ.13.69 கோடியாகக் குறைத்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. 

புதிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். அதேபோல், ஜெ.தீபக், தனது வரி நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்தி வருவதாகக் கூறி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கில் வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அதுவரை வரி நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து வருமான வரித் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2026 ஜன. 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு வட்டியுடன் சோ்த்து வருமான வரி நிலுவை ரூ.9 கோடியே 17 ஆயிரத்து 962-ஆக உள்ளது. செல்வ வரி நிலுவை ரூ.11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 செலுத்தப்பட வேண்டும்.

ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபக், ரூ.6.75 கோடியை ஆறு தவணைகளாகச் செலுத்துவதாகக் கூறி, ரூ.1.12 கோடி செலுத்தியுள்ளாா். இந்த வரி நிலுவைத் தொகைக்காக ஜெயலலிதா இருந்தபோதே, சில சொத்துகள் முடக்கப்பட்டன. எனவே, வரி பாக்கித் தொகையைச் செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துகளை ஏலம்விட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் பிப். 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset