செய்திகள் உலகம்
500 முறைக்கும் மேல் ஊசி குத்தப்பட்ட குழந்தை: சீனாவில் பரபரப்பு
பெய்ஜிங்:
சீனாவின் யுன்னான் மாகாணத்தில், 10 மாதம் வயதுடைய ஆண் குழந்தை, உடல் முழுவதும் ஊசி குத்தப்பட்டக் காயங்களுடன் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தை, தனது தாயால் நூற்றுக்கணக்கான முறை துன்புறுத்தப்பட்டதாக South China Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.
‘பாக் சுய் வென்யுவான்’ என்ற பெயரில் அறியப்படும் ஒரு மருத்துவர் வெளியிட்ட அந்தக் குழந்தையின் சிகிச்சை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இணைய வாசிகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுய், ஷாங்காய் ஜியாவோ தொங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியுடன் இணைந்த சின்ஹுவா மருத்துவமனையின் முதுகுத்தண்டு மையத்தில் பணியாற்றும் மருத்துவராவார்.
அந்தக் குழந்தை கடந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று காய்ச்சல், வலிப்பு காரணமாக மொஜியாங் மாவட்ட மக்கள் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சுய் கூறினார்.
அந்த குழந்தைக்கு சுமார் 500 முதல் 600 முறை வரை ஊசி குத்தப்பட்டிருக்கலாம் என அவர் மதிப்பிட்டார்.
காலணியின் அடிப்பகுதி தைக்கும் ஊசியைப் பயன்படுத்தி, குழந்தையின் கழுத்தில் ஊசி குத்தப்பட்டதாகவும், அந்த ஊசி முறிந்து அதன் முனை கழுத்தின் முதுகெலும்புப் பகுதியில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை அவசியமானது.
ஊசியின் சரியான வடிவம், அதில் முட்கள் உள்ளதா என்பதைக் குறித்து பெற்றோருக்கு தெளிவில்லாததால், அறுவை சிகிச்சை கடினமாக இருந்ததாகத் தெரிவித்தார். தவறாக அகற்றினால் குழந்தைக்குக் கடுமையான காயம் ஏற்படும் அபாயம் இருந்ததாக சுய தெரிவித்தார்.
முழுமையானப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அதே நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மூன்று முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தையின் காய்ச்சல் குறைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்டது.
குழந்தையின் உடலில் காணப்பட்ட ஊசி குத்து காயங்கள் அனைத்தும் தாயால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், பாரம்பரிய “ஊசி குத்து சிகிச்சை” முறையைப் பயன்படுத்தி குழந்தையைத் தானாகவே சிகிச்சை செய்ய முயன்றதாகவும் பொது பாதுகாப்பு துறை, சுகாதார ஆணையம், குடியியல் விவகாரத் துறை, பெண்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
டாவ் (Dao) என அழைக்கப்படும் அந்த தாய் குறைந்த கல்வி பெற்றவர் என்றும், அறிவியல் அறிவு குறைவாக இருந்ததோடு, மனஅழுத்தம் உடையவர் என்று கூறப்படுகிறது.
இணையவாசிகள் இந்தக் கொடூர செயலைக் கடுமையாகக் கண்டித்து, அந்தக் குழந்தையை இனி பெற்றோரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 5:41 pm
நடுவானில் கழன்று விழுந்த விமானச் சக்கரம்
January 30, 2026, 4:36 pm
அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: 30 பேர் உயிரிழப்பு
January 29, 2026, 1:59 pm
தாய்லாந்து காட்டு யானைகளுக்கு கர்ப்பத் தடுப்பு ஊசி
January 29, 2026, 10:33 am
கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் உயிரிழப்பு
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
