செய்திகள் தமிழ் தொடர்புகள்
கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், இந்த மேடையில் இருப்பது என்னுடைய மகிழ்ச்சியை மேலும் கூட்டுகிறது; சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு "செம்மொழி இலக்கிய விருது": முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை:
"தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். விருதுடன், தலா ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித இனம் தன்னுடைய சிந்தனைகளை, தான் சேர்த்த அறிவுச் செல்வத்தை, பிறருக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான், புத்தகங்கள்!
வாசிப்பு மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்று, ஏராளமான முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் எடுத்து செய்து கொண்டிருக்கிறோம்! அதில் முக்கியமானது தான், புத்தகத் திருவிழாக்கள்!
எழுத்தாளர்கள் - பதிப்பாளர்கள் - விற்பனையாளர்கள் – வாசகர்கள் என்று எல்லோருக்குமான உறவுப் பாலமாக, இந்த புத்தகத் திருவிழாக்களை சிறப்பாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
தலைநகரான சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாகதான், இந்த நான்காவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
102 நாடுகளின் பங்கேற்போடு சிந்தனையின் ஊற்றாக, பண்பாட்டின் கருவூலமாக, அறிவுப் பரிமாற்றத்தின் அடித்தளமாக, இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவடைந்ததில் தமிழ்நாடு முதல்வராக மட்டுமல்லாமல், புத்தக ஆர்வலனாகவும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! அதுவும் சர்வதேச புக்கர் பரிசை வென்ற கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக், இந்த மேடையில் இருப்பது என்னுடைய மகிழ்ச்சியை மேலும் கூட்டுகிறது!
“ஏற்கனவே, ஒய்.எம்.சி.ஏ. திடலில், ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறதே, அப்படியானால், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் என்ன?” என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, இந்தப் புத்தகத் திருவிழாவில் - மொழிபெயர்ப்புகள், பதிப்புரிமை பரிமாற்றம் ஆகியவற்றில்தான் மிகுந்த முக்கியத்துவம் செலுத்தியிருக்கிறோம்! அது எவ்வளவு அவசியம் என்பதற்கு இங்கே வந்திருக்கக்கூடிய பானு முஷ்டாக் அவர்களின் வெற்றியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது! ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதால்தான் அவருடைய “ஹார்ட் லேம்ப்” நூலும், தென்னிந்தியப் பெண்களின் வாழ்வுரிமை வாழ்க்கையும், உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது!
நம்முடைய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த, பிற்போக்குத்தனங்களை எதிர்க்கின்ற, சமூகநீதிப் பார்வை கொண்ட, ஒரு பெண் எழுத்தாளரின் வருகையால் நம்முடைய புத்தகத் திருவிழா இன்றைக்கு மிகுந்த சிறப்படைந்திருக்கிறது. எதையும் கேள்விகேட்டு, விமர்சனப் பார்வையுடன் அணுகி, பழமைகளை பொசுக்கிய திராவிட இயக்கம் தமிழ்நாட்டை பண்படுத்தியது. அதேபோல, கர்நாடகத்தில், கன்னட புரட்சி இலக்கிய மரபில் இயங்கி வருகின்ற பானு முஷ்டாக், நம்முடைய அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்காக என்னுடைய நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, அமீரகம் - இப்படி, உலகத்தின் பல பகுதிகளில், இது போன்ற பன்னாட்டு புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்ற செய்திகளை நான் பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம் இப்படிப்பட்ட முன்னெடுப்புகள், தமிழ்நாட்டிலும் நடைபெற வேண்டும் என்று நான் நினைப்பேன்! அந்த எண்ணத்தை இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்!
நம்முடைய மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுக்கப் பரவவேண்டும்; உலகின் உயரிய சிந்தனைகள் நம்முடைய மக்களிடம் வந்தடைய வேண்டும் என்ற கனவு இந்த நிகழ்ச்சியால் நனவாகியிருக்கிறது! மொத்தத்தில் இப்படியொரு அறிவுச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
இலக்கியத்திற்கு எல்லைகள் கிடையாது! திருவள்ளுவரின் அறமும், இளங்கோ அடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துக்களும் உலகமெல்லாம் ஒலிக்கவேண்டும்.
அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த அறிவியல், இலக்கியப் படைப்புகள், எளிய தமிழில், நம்முடைய கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதற்காகவே நம்முடைய அரசு, 'தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை' மூலம் பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கித் தந்து, கடந்த 3 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான நூல்கள் இதன் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் 'பதிப்புரிமைப் பரிமாற்றம்' வெறும் வணிகம் கிடையாது; இரு மொழிகளுக்கு இடையே நடைபெறுகின்ற பண்பாட்டுக் கைக்குலுக்கல்! செம்மொழியான தமிழின் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை உலக மக்களுக்கு சென்று சேரவேண்டும்! இந்த நிலப்பரப்பிலிருந்து எவ்வளவு ஆழமான, பரந்த சிந்தனை கொண்ட கருத்துக்கள், இலக்கிய, இலக்கண மரபுகள் உருவாகியிருக்கிறது என்று நாம் உணர்த்த வேண்டும்!
இங்கே வந்திருக்கின்ற உலகப் பிரதிநிதிகளுக்கு நான் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த மாநிலம் இல்லை; அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம். கீழடி முதல் பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகளை பாருங்கள்; தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது அப்போது புரியும்.
மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் தில்லியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வந்தது. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி, அது நடக்குமா? என்றும் தெரியவில்லை. கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.
அதன்படி, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன்.
குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். இதனை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 18, 2026, 11:12 pm
நாளை சிபிஐ அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
January 16, 2026, 4:24 pm
திருவள்ளுவர் நாள் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2026, 10:35 pm
தமிழகத்தில் இன்றிரவும் நாளையும் மழைக்கான வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
January 15, 2026, 8:21 am
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள் பங்கேற்க ஏற்பாடு
January 14, 2026, 10:11 pm
பூ வாசம் மணக்கட்டும், புத்தெழுச்சி பரவட்டும்: மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
January 13, 2026, 3:57 pm
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
January 13, 2026, 8:59 am
