நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது

சென்னை:

ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டு 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவிச்சி கலை, அறிவியல் கல்லூரியில் இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 (அக்டோபர் 16) தொடங்கியது.

இந்த விழா, சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தென் பகுதி அலுவலகம், இந்திய சுற்றுலா துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள், அவிச்சி கலை, அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.

மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா, பெரும் தாக்கத்தை உண்டாக்கும் சினிமாவின்  கதைசொல்லல், பன்முகத்தன்மை, பரஸ்பர அனுபவங்களைக் கொண்டாடுவதன் மூலம் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே கலாச்சார ஒத்துழைப்பையும் மக்களிடையேயான தொடர்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

தஜிகிஸ்தான், பெலாரஸ், அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் திரு. பி.ஆர். முத்துக்குமார் ஐ.எஃப்.எஸ்.,  கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த விழாவை தொடங்கி வைத்தார். 

பிரபல திரைப்பட இயக்குநர் திரு. பி. வாசு, வெளியுறவு அமைச்சகத்தின் கிளைச் செயலகத் தலைவர் எஸ். விஜயகுமார் ஐ.எஃப்.எஸ்., இந்திய சுற்றுலா அமைச்சக பிராந்திய இயக்குநர்
வெங்கடேசன் தத்தாரேயன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் எட்கர் பாங்,  தாய்லாந்து துணைத் தூதர் ரச்சா அரிபார்க், மியான்மர் கௌரவ தூதர் பேராசிரியர் ஜே. ரங்கநாதன், திரைப்படத் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன், ஏவிஎம்  நிர்வாக இயக்குநர் மற்றும் அவிச்சி கலை, அறிவியல் கல்லூரி தாளாளர் ஏவிஎம் கே. சண்முகம், சோமர்செட் கிரீன்வேஸ் சென்னை பொது மேலாளர் மன்சூர் அஹ்மது உள்ளிட்டோர் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதர் கே. சரவண குமார், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் அவிச்சி கலை, அறிவியல் கல்லூரியின் செயலாளருமான ஏவிஎம் கே. சண்முகம் ஆகியோர் அனைத்து பிரமுகர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கியதோடு ஆசியான்-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டினர்.

தொடக்க உரை ஆற்றிய மலேசிய துணைத் தூதர் கே. சரவண குமார், இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் சினிமா பரிமாற்றங்களைக் கொண்டாடுவதற்காக மலேசியாவின் ஆசியான் தலைமையின் கீழ் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் இந்தியா-ஆசியான் திரைப்பட விழா இது என்று குறிப்பிட்டார்.

இந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆசியான் 2025ன் தலைவராக மலேசியா இருக்கும் நிலையில், ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டின் ஒரு பகுதியாக இந்த கலாச்சார நிகழ்வை முன்னெடுப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

படைப்பாற்றல், பரஸ்பர ஒத்துழைப்பு, கலாச்சார நல்லிணக்கத்தின் கொண்டாட்டமாக இந்தியா-ஆசியான் திரைப்பட விழா திகழ்கிறது. கலை, சினிமா மற்றும் சுற்றுலா மூலம் மக்களிடையேயான தொடர்புகளை ஆழப்படுத்துவதற்கான நமது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார். 

இந்த விழாவில் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

மலேசியா: வாலிட், மென்கரி ராம்லீ

இந்தியா: 12த் ஃபெயில், பொன்னியின் செல்வன்

தாய்லாந்து: டைம் டு ஃபிளை 

சிங்கப்பூர்: ஆ பாய்ஸ் டு மென்

தொடக்க நாள் அன்று மாலை 6:30 மணிக்கு மலேசிய திரைப்படமான வாலிட் திரையிடப்பட்டது. 

- நிகில் முருகன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset