நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை

இறைவனின் உண்மையான அடியார்களுக்குச் சில பண்புநலன்களை வேதம் குறிப்பிடுகிறது.

இந்தப் பண்புநலன்கள் இருந்தால்  வாழ்த்துகளுடன் வரவேற்கப்படுவீர்கள்.

அவை என்ன பண்புகள்?

மனித குலத்திற்கு அருளப்பட்ட இறுதிவேதம் குர்ஆன் 25ஆம் அத்தியாயத்தில் அந்த உயர்பண்புகளைப் பட்டியல் இட்டுள்ளது.

“ரஹ்மானின்- கருணைமிக்க இறைவனின் உண்மையான அடியார்கள் யார் எனில்-

“அவர்கள்  பூமியில் பணிவோடு நடப்பார்கள்.

“அறிவீனர்கள் அவர்களிடம் உரையாடினால் உங்களுக்கு ஸலாம்- சாந்தி உண்டாகட்டும் என்று கூறிவிடுவார்கள்.

“இறைவனின் திருமுன் சிரம்பணிந்தும் நின்றும் இரவைக் கழிப்பார்கள்.

“அவர்கள் இறைஞ்சுவார்கள்: ‘எங்கள் இறைவனே, நரக வேதனையை எங்களைவிட்டு அகற்றுவாயாக. அதன் வேதனையோ ஓயாது தொல்லை தரக் கூடியது. திண்ணமாக நரகம் தீய தங்குமிடமாகவும் மிகவும் மோசமான இடமாகவும் இருக்கிறது.’

“அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இருநிலைகளுக்கு இடையில் மிதமானதாக இருக்கும்.

“அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை.

“அல்லாஹ்வினால் தடைசெய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை.

“அவர்கள் விபச்சாரமும் செய்வதில்லை....

“அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை.

“அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமாகக் கடந்து சென்றுவிடுவார்கள்.

“தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக் குறித்துக் குருடர்களாகவும் செவிடர்களாகவும் இருப்பதில்லை.

“அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: ‘எங்கள் இறைவனே, எங்கள் மனைவியரையும் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக. எங்களை இறையச்சமுடையோர்க்குத் தலைவர்களாய்த் திகழச் செய்வாயாக.’

இத்தகையோரே தங்களின்பொறுமை காரணமாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள். மரியாதையுடனும் வாழ்த்துகளுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள். 

அவர்கள் என்றென்றும் அங்கு தங்கி வாழ்வார்கள். 

எவ்வளவு அழகானதாக இருக்கிறது அந்தத் தங்குமிடம்...! 

எவ்வளவு உன்னதமாக இருக்கிறது அந்த ஓய்விடம்...! (குர்ஆன் 25:63-68, 72-76)

-சிராஜுல் ஹஸன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset