நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் ஆக மோசமான பணிப்பெண் வதைச் சம்பவங்களின் தொடர்பில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி கெவின் செல்வத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

46 வயது போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியான செல்வத்தைக் குற்றவாளி என  மாவட்ட நீதிபதி டியோ அய் லின், ஏப்ரல் மாதத்தில் தீர்ப்பளித்தார்.

மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண் திருவாட்டி பியாங் நியே டானைப் பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்திய அவரது அப்போதைய மனைவி காயத்திரி முருகையனுக்கு உடந்தையாக இருந்த ஒரு குற்றச்சாட்டு, கெவின் மீது சுமத்தப்பட்டது. 

அத்துடன், அந்த 24 வயது பணிப்பெண்ணின் தலைமுடியைப் பிடித்து தரையிலிருந்து தூக்கியது தொடர்பிலும் செல்வம் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிக்குப் பொய்யான தகவல் அளித்த குற்றத்தையும் பீஷானிலுள்ள தன் அடுக்குமாடி வீட்டிலுள்ள கண்காணிப்புக் கேமராவை அகற்றி ஆதாரத்தை மறைத்த குற்றத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது.

மியன்மாரைச் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணைச் சித்திரவதை செய்தோரின் குற்றம் உறுதிசெய்யப்பட்ட கடைசி நபராக செல்வம் இருந்தார்.

2016ல் அந்தப் பணிப்பெண் இறந்தபோது அவரது எடை 24 கிலோவாக இருந்தது. 2015 மே 28ல் செல்வத்தின் குடும்பத்திற்கு வேலை செய்யத் தொடங்கியபோது அவரது எடை 39 கிலோகிராம்.

ஆகஸ்ட் 2016ல் அவர் சிங்கப்பூர்க் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். 2020ல் செல்வமும் காயத்திரியும் மணவிலக்கு பெற்றனர்.

2021ல் 41 வயதாக இருந்த காயத்திரிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பணிப்பெண் சித்திரவதைச் சம்பவம் ஒன்றின் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஆகக் கடுமையான சிறைத்தண்டனையாக இது உள்ளது. 

ஈராண்டுகள் கழித்து காயத்திரியின் தாயார் பிரேமா எஸ். நாராயணசாமிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 64 வயது. இரண்டு பெண்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறைந்தது 35 நாள்களுக்குத் திருவாட்டி பியாங் நியா டோனுக்குப் போதிய உணவு தரப்படவில்லை.  இறந்த நிலையில் அவரது பிரேதத்தின் உடல் நிறை குறியீட்டு எண் (பிஎம்ஐ), 11.3 ஆக இருந்தது.  அது, 18.5க்கும் 22.9க்கும் இடையிலான ஆரோக்கிய பிஎம்ஐயைக் காட்டிலும் மிகக் குறைவு. 

செல்வத்தின் நீதிமன்ற விசாரணையின்போது சாட்சியம் அளித்த மருத்துவர்கள், அந்தப் பணிப்பெண் எலும்பும் தோலுமாகக் காணப்பட்டார்.

மோசமாகியுள்ள புற்றுநோய் அல்லது காச நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஒப்பான பிஎம்ஐ, அந்தப் பெண்ணுக்கு இருப்பதாக அவர்கள் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

14 மாதங்களாக திரும்பத் திரும்ப சித்திரவதை செய்யப்பட்ட திருவாட்டி பியாங்,  2016 ஜூலை 26ல் மூளைக் காயங்களால் இறந்தார். மியன்மாருக்கு வெளியே முதன்முறையாக அவர் வேலை செய்தது, அந்த வீட்டில்தான். 

திருவாட்டி பியாங்கையும் அந்த இணையரின் இரு பிள்ளைகளையும் கண்காணிப்பதற்கு அந்த வீட்டில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஜூன் 21க்கும் ஜூலை 26க்கும் இடையே அந்தப் பணிப்பெண், இஸ்திரிப் பெட்டியால் சுடப்பட்டதையும் கழுத்து நெறிக்கப்பட்டதையும் கடுமையாகக் குத்தி தாக்கப்பட்டதையும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்தன.

ஆதாரம்: தமிழ்முரசு 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset