
செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழ் பேசும் அமைச்சரை பிரதமர் எப்போது நியமிப்பார்? இப்போதில்லை என்றால் எப்போது?
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்தின் தமிழ் பேசும் அமைச்சரின் தேவையை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்போது இல்லை என்றால் எப்போது பூர்த்தி செய்வார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
மெர்டேக்கா ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் பிரதமருக்கான ஆதரவு 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆதரவு உயர்ந்துள்ளது.
இந்த ஆதரவு உயர்வால் பெருமைப்படும் அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் ஆதரவையும் பிரதமர் கருத்தில் கொள்ள வேண்டும்.
காரணம் பிரதமர், மடானி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இந்திய சமுதாயத்திடையே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் குறைந்து வருகிறது.
இதற்கு இந்திய சமுதாயத்திடையே நிலவும் பல்வேறு பிரச்சினைகளும் அதற்கு தீர்வு கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுவதும் முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாக தமிழ் பேசும் ஒருவர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதும் சமுதாயத்தின் மிகப் பெரிய கோரிக்கையாகும். காலங்காலமாக இருந்துவந்த நடைமுறையை மதானி அரசு கண்டும் காணாததுபோல் இருப்பது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது.
இக் கோரிக்கையும் பிரதமரும் மடானி அரசும் கண்டு கொள்வதே இல்லை.
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பொறுப்பேற்ற பின் வி. சிவக்குமார் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றார்.
மனிதவள அமைச்சராக இருந்தாலும் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
ஆனால் அவரின் பதவிக் காலம் நீடிக்கவில்லை. அவருக்கு பதிலாக கோபிந்த் சிங் இலக்கவியல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கோபிந்த் சிங் இந்தியராக இருந்தாலும் இந்திய சமுதாய பிரச்சினைகளில் அவர் அக்கறை செலுத்துகிறாரா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
ஆக இந்நிலை நீடித்தால் இந்திய சமுதாயத்தின் ஆதரவு பிரதமருக்கு தொடர்ந்து குறையுமே தவிர அதிகரிக்காது.
கெஅடிலான் கட்சித் தேர்தலை தொடர்ந்து ரபிசி ரம்லி, நிக் நஸ்மி ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகினர். இதனால் அமைச்சரவையில் இரு இடங்களில் காலியாகியுள்ளது.
இதனால் புதியவர்கள் அப் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். ஏன் தேவைப்பட்டால் பிரதமர் அமைச்சரவையே மாற்றி அமைக்கலாம்.
பிரதமர் அவ்வாறு முடிவு செய்தால் தமிழ் பேசும் அமைச்சர் அமைச்சரவையில் இருப்பாரா அல்லது இம்முறையும் ஏமாற்றம் தான் மிஞ்சுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
ஒருவேளை தமிழ் பேசும் அமைச்சர் நியமிக்கப்பட்டால் யார் அவர் என்ற கேள்வியும் பரவலாக உள்ளது.
கெஅடிலான் கட்சித் தேர்தலுக்கு பின் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணனுக்கு அவ்வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
காரணம் பல்லின கட்சியான கெஅடிலானில் உதவித் தலைவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்து தனது பலத்தை அவர் நிரூபித்துள்ளார்.
மித்ராவை அடுத்து துணையமைச்சராக இந்திய சமுதாயத்திற்கு பல்வேறான திட்டங்களை அவர் அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இத் திட்டங்கள் இந்திய சமுதாயத்திற்கு பரவலான பலனையும் அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் புதிய அமைச்சர்கள் பட்டியலில் டத்தோஶ்ரீ ரமணின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த முடிவை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் எப்போது எடுப்பார் என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
ஆக பிரதமர் இவ்விவகாரத்தில் இன்னும் காலத்தை தாமதிக்காமல் உரிய முடிவை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் எஞ்சிய ஆட்சிக் காலத்தில் மடானி அரசாங்கத்தின் ஆற்றலையும் திறனையும் மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 8:25 pm
50 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை கெளரவிக்கும் மாபெரும் விழா ஆகஸ்ட் 23இல் நடைபெறும்: காளிதாசன்
June 25, 2025, 7:59 pm
தேர்தலிலிருந்து யாரும் வாபஸ் பெறவில்லை: வழக்கறிஞர் மதியழகன்
June 25, 2025, 12:36 pm