
செய்திகள் கலைகள்
ஆதிபராசக்தி படத்தில் 'மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே' பாடல் பிறந்த கதை: ஜூன் 24 கண்ணதாசன் பிறந்த தினம்.
தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன், அந்தப் பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்..!
இது நடந்தது 'ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.
அந்தப் படத்தில் அபிராமி பட்டர், அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல். இந்தக் காட்சிக்கு 'அபிராமி அந்தாதி' பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்வுகள் அதில் வரவில்லை.
"அழைத்து வாருங்கள் கண்ணதாசனை!"
வந்தார் கண்ணதாசன்.
காட்சியை விளக்கினார் இயக்குநர்.
கண்ணதாசன் தயாரானார் :
"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்."
கண்ணதாசன் சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.
"மணியே மணியின் ஒளியே
ஒளிரும் மணி புனைந்த
அணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே
பிணிக்கு மருந்தே
அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை
நின் பத்ம பாதம் பணிந்த பின்னே."
இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார்.
கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கண்ணதாசன்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை அவரது சொந்த வார்த்தைகள்:
"சொல்லடி அபிராமி
வானில்
சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ?"
வார்த்தைகள் வந்து விழ விழ, அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர்.
கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பாடல் முடிந்து விட்ட வேளை அது.
பாடலின் இறுதி வரிகளாக என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் திருப்தி தரவில்லை அவருக்கு.
மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன் .
அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் துள்ளிக் குதித்து வந்து பந்து விளையாடுகிறாள்.
அவள் பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன்.
ஆம். திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.
( தென்காசியை அடுத்த மேலகரத்தில்
18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் திருக்குற்றாலக் குறவஞ்சி )
அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள்.
பந்து துள்ளுவதைப் போல,
பாடல் வரிகளும் கூட துள்ளும்.
இதோ, அந்தப் பகுதி :
வசந்தவல்லி பந்தடித்தல்
செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட -
இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட -
இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட -
மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.
இந்த பந்து விளையாட்டுப் பாடலை,
பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு, கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்.
"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ..."
இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்.
நிச்சயமாக டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரைக் கொடுத்துப் பாடி இருக்க முடியாது.
எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
கண்ணதாசனைத் தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளைக் கோர்த்து
இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது.
ஜூன் 24
கண்ணதாசன் பிறந்த தினம்.
- ஜான் துரை ஆசிர் செல்லையா
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 4:16 pm
சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது: நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல்
June 25, 2025, 4:11 pm
பிரான்ஸ் இசை விழாவில் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்
June 25, 2025, 11:06 am
80க்கும் மேற்பட்ட மாணவக் கலைஞர்களின் படைப்புகளுடன் பத்துமலையில் பிரமாண்ட இசை கதம்பம்
June 24, 2025, 4:26 pm
தக் லைஃப் படம் ஏமாற்றம்: மன்னிப்பு கேட்டார் இயக்குநர் மணிரத்னம்
June 23, 2025, 7:11 pm
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது
June 20, 2025, 12:36 pm
நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்திற்குக் கருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது
June 18, 2025, 6:36 pm
இயக்குநர் விஜய் கணேஷ் இயக்கத்தில் மிருகசீரிசம்: நாளை ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது
June 18, 2025, 12:40 pm