
செய்திகள் மலேசியா
ஆலய திருவிழாவில் எஸ்பிஎம் தேர்வில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
மெந்தகாப்:
ஆலய திருவிழாவில் எஸ்பிஎம் தேர்வில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டது பாராட்டுக்குரிய முயற்சியாகும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
பகாங் மாநிலத்தில் மெந்தகாப்பில் அமைந்துள்ள ஶ்ரீ மகா கல்லுக்கோரி காளியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழாவில் முக்கிய அங்கமாக 2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பகாங் மாநில புத்ரா வவாசான் திராம் மேம்பாட்டு சங்கத்துடன் இணைந்து ஆலய நிர்வாகம் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கியது.
ஆலய நிர்வாகமும் அரசு சாரா இயக்கங்களும் இணைந்தால் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தலாம் என்பது இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
அதே வேளையில் அரசாங்கம் உறுதியளித்தபடி எஸ்பிஎம் தேர்வில் 10ஏ, அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு வழங்க வேண்டும்.
இது தகுதியான மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும். குறிப்பாக அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
முன்னதாக ஆலய திருவிழாவை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக ஆலயத் தலைவர் சுதாகரன் கிருஷ்ணனுக்கும் அவர்தம் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.
மேலும், கல்வியை ஆதரிப்பதிலும் இளைய தலைமுறையினரை மேம்படுத்துவதிலும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுகள் என்று ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm