நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அவனுக்குக் கட்டுப்படாமல் இருக்கும்போதும் அவன் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறான் என்றால்...! வெள்ளிச் சிந்தனை

சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள், ஆயினும் அவன் தனது அருட்கொடையை உங்களுக்குத் தடுத்துவிட்டான் என்றால் அது குறித்து நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை.

ஏனெனில், அந்த நேரத்தில் அவன் உங்களை நெருங்கி வருகிறான் என்று பொருள்.

ஆனால் அவனுக்குக் கட்டுப்படாமல் இருக்கும்போதும் அவன் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறான் என்றால் அது குறித்து நிச்சயம் நீங்கள் அஞ்சத்தான் வேண்டும்.

ஏனெனில், அந்த நேரத்தில் அவன் உங்களுக்கு அவகாசம் தருகிறான். நீங்கள் திருந்துகின்றீர்களா என்று பார்க்கிறான்.

நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சாத போதும் வசதி வாய்ப்புகளையும் அதிகாரத்தையும் வாரி வழங்கி உங்களைத் திக்குமுக்காடச் செய்கிறான் என்றால்... 

அவன் உங்களை படிப்படியாக அழிவின் பக்கம் இழுக்கிறான் என்று பொருள்.

"எகிப்தின் அரசாட்சி என்னுடையதல்லவா?'' (43:51) என்று ஆணவத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்தவாறு கொக்கரித்தான் ஃபிர்அவ்ன்.

இறுதியில் என்னவாயிற்று? காலுக்குக் கீழே ஓடும் தண்ணீரை அவனது தலைக்கு மேலாக ஓடவிட்டான்.

"நானே வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றேன்'' (2:258) என்றான் தலைக்கனம் பிடித்த நம்ரூத். 

இறுதியில் என்னவாயிற்று? தலையில் நுழைந்த ஒரு சாதாரணக் கொசு அவனைக் கொன்றது.

"எங்களைவிட வலிமை மிக்கவர் யார்?'' (41:15) என்று ஆணவத்துடன் ஆடியது ஆத் சமூகம்.

இறுதியில் என்னவாயிற்று? அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு காற்று வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களைப் பிடுங்கி எறிந்தது.

இதை ஒரு பொது விதியாக எடுத்துக்கொள்ளுங்கள்:

"கீழ்படிதலுடன் கூடிய அருட்கொடைகள் சங்கை மிக்கவை. கீழ்படியாமையுடன் கூடிய அருட்கொடைகள் படிப்படியாக அழிவின் பக்கம் இழுத்துச் செல்பவை''.

ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்:

"அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம்'' (7:182)

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset