நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்; மலேசியப் பேராளர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்: பேராசிரியர் தி மு அப்துல் காதர்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய முஸ்லிம்கள் நடத்திய மாநாட்டை வழிகாட்டியாக கொண்டே உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடைபெறுகிறது.

புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான  பேராசிரியர் கவியருவி தி மு அப்துல் காதர் இதனை கூறினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு வரும் மே 9,10,11ஆம் தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம் மாநாட்டை தொடக்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம் மக்களை இம் மாநாட்டிற்கு அழைக்கும் நோக்கில் இங்கு வந்தேன்.

காரணம் இம்மாநாட்டின் வெற்றிக்கு மலேசியாவில் உள்ள சமுதாய மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை. நாங்கள் இதுவரை நடத்திய எல்லா மாநாடுகளிலும் மலேசியப் பேராளர்கள் திரளாகக் கலந்துகொண்டு வற்றாத ஆதரவை வழங்கி வந்துள்ளனர்.

அதே வேளையில் மலேசிய இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 2011 இல் பிரம்மாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இந்திய பேராளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

ஒரு மாநாடு எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு மலேசிய மாநாடு ஓர் உதாரணமாக இருந்தது.

இந்த வழிகாட்டியுடன் திருச்சியில் அடுத்த மாதம் மாநாடு நடைபெறவுள்ளது. இதுவரை நாங்கள் நடத்திய எல்லா மாநாடுகளிலும் டாக்டர் கலைஞர் நிறைவுரை வழங்குவது வழக்கம். இந்த மாநாட்டில் அவரது புதல்வரும் முதல்வருமான ஸ்டாலின் துவக்கி வைக்க இருக்கிறார்.

மாநாடுகள் மூலம் என்ன பயன் கண்டோம் என்று கேட்டால் பலவற்றை பட்டியலிடலாம். காணாமல் போன பல இலக்கியங்களை தேடிப் பிடித்து பதிப்பிட்டுள்ளோம். அந்த மாநாட்டில் தான் டாக்டர் கலைஞர் மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கினார். இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளை முஸ்லிம் சமூகம் இன்றளவும் பெற்று பயனடைந்து வருகிறது.

டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையில் மலேசியாவில் இருந்து அதிகமான பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

இதுவே எங்களின் அவா என்று பேராசிரியர் திமு அப்துல் காதர் கூறினார்.

முன்னதாக மாநாட்டின் பொருளாளர் ஷாஜஹன் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். 

சிம்ஸ் அமைப்பின் தலைவர் டத்தோ எம் இசட் கனி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்றார்.

டத்தோ டாக்டர் செய்யது இப்ராஹீம், டத்தோ ஜமருல் கான், பெர்மிம் தலைவர் ஷேக் ஃபரீதுத்தீன், துணைத் தலைவர் அஸ்ரின், மிம்காய்ன் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத், மலேசிய இந்திய நகை வணிகர்கள் சங்கத் தலைவர் டத்தோ ரசூல், தீன் குழுமத் தலைவர் டத்தோ சிராஜ்தீன், அமானா உச்ச மன்ற உறுப்பினர் ஹாஜி பஷீர், மாவார் தலைவர் ஹாஜி ஹலீம், ஐக்கிய ஜமாஅத் செயலாளர் மன்னான், கெபிமா நிறுவனர் முஹம்மது, சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது, குறிஞ்சித் திட்டு பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset