செய்திகள் சிந்தனைகள்
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
இப்பொழுது நிம்மதியா உங்க ளுக்கே ?
ஏ,தமிழ இனத்தீரே ... இந்த ஆண்டில்
எப்பொழுதும் இல்லாத அளவாய் ... ஐயோ...
இங்குள்ள மாணவர்கள் தமிழ்ப்பள் ளிக்கே
தப்பாமல் போதல்பெருங் குற்றம் என்று
தவறாக எண்ணியதைக் குறைத்தே விட்டார் !
செப்பிடவோ நா,நாணிக் கூச்சம் கொள்ளும் !
செந்தமிழ்த்தா யைமானம் குத்திக் கொல்லும் !
அப்படியா சேதி,எனக் கேட்டு விட்டே
அமைதிகொண்டார் தமிழ்ப்பெற்றோர் சீச்சீ... வெட்கம் !
அற்றைநாள் தமிழ்ப்பள்ளி களைப்போல் இன்றும்
அவலமுடன் தமிழ்ப்பள்ளி இருக்கும் என்றே
ஒற்றைக்கண் பார்வைசெய்த முடிவும் தப்பே !
உலகளவில் அறிவியலில் இற்றை நாளில்
மற்றவரைப் போட்டியிலே வெற்றி கண்டு
வகைவகையாய்ப் பரிசுபல பெற்றே வந்து
உற்றவரின் - நம்நாட்டின் புகழு யர்த்தும்
உயர்தமிழப் பள்ளிகளை வெறுத்தல் நன்றா ?
மாணவர்கள், ஆசிரியர், தமிழப் பள்ளி
மற்றெதிலும் ஒருகுறையும் இல்லை ; ஆனால்
மாணவர்தம் பெற்றோர்கள் தாமே என்றும்
மதில்பூனை யாயிருந்து சொந்தப் பிள்ளை
மாணவரைத் தமிழ்ப்பள்ளிக்(கு) அனுப்பி டாமல்
மடமையிலே இருக்கின்றார் ; திருந்தா ராமோ ?
போனவரை போகட்டும் ! இனிமே லேனும்
புத்தியுடன் தமிழ்ப்பள்ளிக்(கு) அனுப்பி டட்டும் !
உலகளவில் அவரவர்,தம் தாய்மொ ழிக்கே
உயர்மதிப்பைத் தருவதுடன் கற்கின் றார்கள் !
உலகளவில் முதல்மூப்புத் தமிழ்மொ ழிக்கே
உரியவராய் இருக்கின்ற தமிழ மக்கள்
பலர்,தமிழைப் படிப்பதில்லை ; வெறுப்ப தோடு
பகடிசெய்தும் தம்மொழியைப் பழிக்கின் றார்கள் ;
சிலர்மட்டும் தமிழ்கற்றுப் பேணு கின்றார் !
சிலர்,பலராய் ஆகும்நாள் வரவே வேண்டும் !
- பாதாசன்
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 7:09 am
இறைவனிடம் எதுவரை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்? எங்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
February 20, 2026, 11:49 am
பூத்து வருகிறது, புண்ணிய மாதம் - வெள்ளிச் சிந்தனை
February 13, 2026, 11:57 am
உணவை வீணாக்கினால் ஃபிரான்சில் அபராதம்: நோன்பில் நாம் என்ன செய்யப் போகிறோம்?
February 6, 2026, 4:50 pm
பெர்மிமில் நடப்பது என்ன? துவக்கப்பட்ட நோக்கத்தை விட்டு பெர்மிம் விலகிச் செல்கிறதா?
February 6, 2026, 7:41 am
மனிதக் குழந்தையும் சிம்பன்சி குட்டியும் - வெள்ளிச் சிந்தனை
January 30, 2026, 8:37 am
சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள்
January 28, 2026, 10:21 pm
