நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சிலர் கரத்தால் உதவுகிறார்கள்; இன்னும் சிலர் கருத்தால் உதவுகிறார்கள் - வெள்ளிச் சிந்தனை.

மதீனத்துப் பள்ளிவாசலில் பெருங்கவிஞர் ஹஸ்ஸான் (ரலி) கவிபாடிக்கொண்டிருக்க, அங்கே வந்த உமர் (ரலி), ‘அமைதியாக இருக்குமாறு' அவரை நோக்கி சைகை செய்தார்.

அப்போது ஹஸ்ஸான் (ரலி), "இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபிகளார்) இருக்கும்போதே நான் கவிபாடிக்கொண்டிருந்தேன்'' என்று கூறிவிட்டு, அபூஹுரைரா (ரலி) பக்கம் திரும்பி,

"அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் கேட்கிறேன்: என்னிடம் நபிகளார், "ஹஸ்ஸானே! என் சார்பாக எதிரிகளின் வசை கவிகளுக்கு நீங்கள் பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ஜிப்ரீல் மூலம் துணை புரிவாயாக!'' என்று கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர், "ஆம்'' என்று கூறவும், உமர் (ரலி) அமைதியாகச் சென்றுவிட்டார். (புகாரி)

ஒவ்வொருவரிடமும் ஒவ்வோர் ஆற்றல் இருக்கும். மார்க்க வளர்ச்சிக்கு அந்த ஆற்றல் மூலம் பங்காற்ற வேண்டும். அது அவரது கடமை. அதனால்தான் இந்த மார்க்கம் அபார வளர்ச்சி கண்டது.

அபூபக்கர் (ரலி) அடிமைகளை உரிமை விட்டு உதவினார். உமர் (ரலி) நீதிமிக்க ஆட்சியால் உதவினார். உஸ்மான் (ரலி) பணத்தால் உதவினார். அலீ (ரலி) வீரத்தால் உதவினார். காலீத் பின் வலீத் (ரலி) வாளால் உதவினார். ஹஸ்ஸான் (ரலி) கவிதையால் உதவினார். ஸைத் இப்னு சாபித் (ரலி) குர்ஆனை நூல் வடிவில் தொகுத்து உதவினார்.

எனது பணியே சிறந்தது என்று நபித்தோழர்கள் யாரும் தம்பட்டம் அடிக்கவில்லை.

பள்ளிவாசலில் தொழ வைப்பதும், பயான் செய்வதும் மட்டுமே மார்க்கப் பணியல்ல. விவாதங்களில் பங்கெடுப்பதும், போராட்டங்களை முன்னெடுப்பதும் மட்டுமே சிறந்த செயல் அல்ல.

வீட்டை திறம்பட நிர்வகிக்கும் பெண், வியாபாரி, செல்வந்தர், ஏழை, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், கடை நிலை ஊழியர் எல்லோரும் இயன்றவரை தமது பங்களிப்பைச் செலுத்துகிறார்கள், செலுத்த வேண்டும்.

இதில் யாரையும் உயர்வாகவோ குறைவாகவோ மதிப்பிட முடியாது. நான் செய்வதே சிறந்த பணி என்று வாதிடக் கூடாது.

எல்லோருடைய சேவையும் இந்த மார்க்கத்திற்குத் தேவையே.
 
சிலர் கரத்தால் உதவுகிறார்கள். இன்னும் சிலர் கருத்தால் உதவுகிறார்கள். அவ்வளவுதான்!

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset