செய்திகள் மலேசியா
மக்கள் நலனை குறிக்கோளாக வைத்து போராடும் எங்களுக்கு எதிராக பிரிமாஸ் தலைவர் பொங்குவது ஏன்?: பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் கேள்வி
பினாங்கு:
24 மணி நேரமும் நடத்தப்படும் உணவகங்கள் தொடர்பாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டிருந்த மக்கள் நலன் சார்ந்த செய்திக்கு பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஸ் என்பவர் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை தருவதாக பி.ப.சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கூறினார்.
இந்நாட்டின் இளைஞர்களின் எதிகால ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து ஒரு கருத்தை அரசின் கவனத்திற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கொண்டு சென்றது என்று அவர் சொன்னார்.
24 மணி நேர உணவகங்கள் இன்னும் திறக்கப்படக்கூடாது. அவர்களின் வியாபார நேரத்தை குறைத்துக் கொள்ளும்படி நாங்கள் சிபாரிசு செய்தோம்.
இது மலிவான சுய விளம்பரம் அல்ல. நீங்கள் இன்னும் அதிகமாக உணவுக்கடைகள் திறப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. இது அவரவரின் விருப்பம்.
ஆனால் 24 மணிநேர உணவுக்கடைகளில் நமது எதிர்கால இளைஞர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வருவதுதான் எங்களுக்கு கவலை தருகின்றது.
அவர்களின் மீது உள்ள அக்கறை, பரிவு ஆகியவற்றின் காரணமாக இந்த ஆலோசனையை நாங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் என்றார் முஹைதீன்.
உண்ணும் நேரத்தில் உறங்குவது, உறங்கும் நேரத்தில் உண்ணுவதுதான் இன்றைய மலேசிய இளைஞர்களின் வாழ்க்கையாகிவிட்டது.
24 மணிநேர உணவகங்கள் என்றால் அது இந்திய உணவகங்கள் என்று பொருள்படாது. மற்ற கடைகளும் இதில் அடங்கும் என்றார் அவர்.
மலேசிய இளைஞர்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், சிந்தனையில் இந்த வேண்டுகோளை முன் வைத்தோம்.
மலிவான விளம்பரத்தைத் தேடுவதற்காக அல்ல. அதற்காக பெரிமாஸ் சங்கத் தலைவர் பொங்கி எழவேண்டியத் தேவை இல்லை.
மலேசியர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். சுய விளம்பரம் அல்ல.
அதிக அளவு சீனி சேர்க்கப்பட்ட பானங்களை மலேசியர்கள் உண்பதால், நாட்டில் 5 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சின் துணை அமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சாவ்னி நேற்று தெரிவித்தார்.
இவர்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 4 பில்லியன் ரிங்கிட் செலவு செய்வதாகவும் துணை அமைச்சர் அதிர்ச்சியான செய்தியை தெரிவித்தார்.
நமது நாட்டில் வயது வந்தோரில் 30.4% அதிக எடை கொண்டவர்களாகவும்,19.7% பருமன் உடையவர்களாக இருக்கின்றனர் என சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுவதாக முஹைதீன் தெரிவித்தார்.
மலேசியாவில் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தருகின்ற தகவல்.
ஒருவரின் உணவுப் பழக்கம் மாற்றப்படாத வரையில் அவரது உடல் ஆரோக்கியமாக இருக்காது. அவரது நோய் தொற்ற்றும் குறையாது.
உணவகங்களின் வர்த்தக நேரம் குறைக்கப்பட்டால் ஒரு சில ஆயிரம் இளைஞர்களின் ஆரோக்கியத்தை காப்பாற்ற முடியும். இவர்கள் நல்ல நித்திரையோடு வாழமுடியும். புத்துணர்ச்சியோடு அடுத்த நாள் பணியில் ஈடுபடலாம்.
சுய விளம்பரத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஒருபோதும் நாடியது கிடையாது. இது அனைத்து அமைச்சுகளுக்கும் தெரியும். தவறு என்றால் அதை சுட்டிக்காட்ட ஒருபோதும் பி ப ச தயங்காது என்றார் முஹைதீன் அப்துல் காதர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm