செய்திகள் தமிழ் தொடர்புகள்
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.
தமிழ் மொழி; தொன்மை – தனித்தன்மை – பொதுமைப் பண்பு - பண்பாடு – உயர்ந்த சிந்தனை – இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.
தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.
கழக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழக அரசு தனிப்பெரும் நிலையில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.
மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12-ஆம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.
“இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
தொடர் விடுமுறையால் திக்குமுக்காடிய சென்னை சாலைகள், பேருந்துகள்
September 11, 2026, 4:29 pm
பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90
September 10, 2026, 12:11 pm
