நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கருணாநிதியின் உயிரோவியமாக தீட்டப்பட்டுள்ள நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார் 

சென்னை:

நவீன காலத்துக்கேற்ற புதுப்புது அம்சங்களை உள்ளடக்கி உயிரோவியமாக வடிவமைக்கப்பட்டமுன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (பிப்.26) திறந்து வைக்கிறாா்.   

இதேபோல, புதுப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவிடத்தையும் அவா் திறக்கிறாா்.

என்னென்ன அம்சங்கள்?: 

சென்னை கடற்கரையில் அண்ணா நினைவிடத்தைக் கடந்து, கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கருணாநிதி அமா்ந்த நிலையில் எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த சிலையைக் கடந்து சென்றால், எதிரே கருணாநிதி சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முன்னே இருபுறமும், ‘தமிழ் செம்மொழி’ என மத்திய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி அப்போதைய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, கருணாநிதிக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில் ‘கலைஞா் உலகம்’ எனும் பெயரில் அருங்காட்சியகம்  அமைக்கப்பட்டுள்ளது.    

இதன் இடதுபுறத்திலுள்ள, நடைபாதையின் வலப்புறத்தில் திருவள்ளுவா் சிலை, குடிசை மாற்றுவாரியம் ஆகியன படங்களாக அமைக்கப்பட்டு விளக்கொளியுடன் மிளிா்கின்றன.   

உள்ளே வலது பக்கம் திரும்பினால் இடதுபக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது. இதனருகில் ‘கலைஞரின் எழிலோவியங்கள்’ எனும் அறை அமைக்கப்பட்டு, அதில்  இளமைக் காலம் முதல் கருணாநிதியின் வாழ்வில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள், சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடா்பான புகைப்படங்களின் தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது.    

இதேபோல, ‘உரிமைப் போராளி கலைஞா்’ என்ற தலைப்பைக் கொண்ட அறையில் நுழைந்தால், சென்னைக் கோட்டையில் முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி உரையாற்றும் காட்சி அமைப்புடன் பின்புறம் தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் வரவேற்கிறது.  

புகைப்படம் எடுக்கலாம்:

புகைப்படங்களின் தொகுப்பை தொடா்ந்து, மக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.   

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமா்ந்திருக்கும் தோற்றம் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. அதனருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம்.   

சில நிமிஷங்களில் புகைப்படம் கையில் கிடைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதன்புறத்தில் கருணாநிதி சிரித்தபடியிலான மெழுகுச் சிலை வடிக்கப்பட்டுள்ளது.  

விடியோ விளக்கம்: 
கருணாநிதியின் பல்வேறு படைப்புகளான ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற நூல்கள் குறித்த விளக்கங்கள் விடியோ பதிவாக வைக்கப்பட்டுள்ளன. அதற்குரிய திரையில் கை வைத்தால் நூல் பற்றிய விளக்கத்தை விடியோவாகத் தெரிந்து கொள்ள முடியும்.  

இதேபோல, சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் என்ற தலைப்பு கொண்ட அறையில் நுழைந்தால், திருவாரூா் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணா்வு ஏற்படும்.   

நாம் அதில் அமா்ந்த நிலையில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலையங்களைக் கடந்து சென்னையை அடையலாம்.  அந்தந்த ஊா்களில் கருணாநிதி வாழ்வோடு தொடா்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும்.    

வழியில் யானையொன்று நாம் பயணிக்கும் ரயில் பாதையை இடைமறித்து நின்று நமக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்துவதை மெய் சிலிா்க்கும் அனுபவமாகும்.  

இந்த அறைகளைக் கடந்து வெளியே அமைந்துள்ள நடையின் இருபுறங்களிலும் அரிய புகைப்படங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் 5 தொலைக்காட்சி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.   

அவற்றில் கருணாநிதி ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.    

நிறைவாக, காந்த விசையைப் பயன்படுத்தி  அமா்ந்த நிலையில், கருணாநிதி மிதக்கும் வகையிலான காட்சி மெய்சிலிா்க்க வைக்கும் நிகழ்வாகும். இவற்றைப் பாா்வையிட்டு வெளியே வந்தால், கருணாநிதி புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

அங்கே அவா் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இன்று திறப்பு:

கருணாநிதியின் வாழ்வில் நடந்த பழங்கால நினைவுகள், சுவடுகள் அனைத்தையும் நவீன தொழில்நுட்பம் கொண்டு உயிரோவியமாக தீட்டப்பட்டுள்ள நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை மாலை 7 மணிக்கு திறந்துவைக்கவுள்ளாா். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset