நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோக்கி நாய் மரணித்த சம்பவம்: இரு சந்தேக நபர்களும் தங்களின் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்

கிள்ளான்: 

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ரோக்கி எனும் நாய்க்கு காயத்தை விளைவித்து மரணத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் இரு சந்தேக நபர்களும் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 

இருப்பினும், அவர்கள் இருவரும் தங்களுக்கு எதிரான குற்றங்களை மறுத்து விசாரணை கோரினர். 

குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான MUHAMMAD SHAH IDHAM NOR SHAHAROM மற்றும் 42 வயதான எஸ். ரோகினி தேவி ஆகிய இருவரும் நீதிபதி முஜிப் சரோஜி முன்னிலையில் தனித்தனியாக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கேட்ட பிறகு தங்களின் குற்றங்களை மறுத்தனர். 

குற்றச்சாட்டின்படி, கடந்த ஜூலை 29ஆம் தேதி இரவு 11 மணி முதல் 11.30 மணிக்கு இடைப்பட்ட வேளையில், போர்ட் கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டா, ஜாலான் சாமா GAJAH வில் உள்ள ஒரு வீட்டின் முன்னே, முகமது ஷா ஒரு கயிற்று வளையத்தைப் பயன்படுத்தி அந்த நாயை நியாயமற்ற முறையில் நெரித்ததாகவும், ரோகினி அந்நாயை இழுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விருவர் மீதான குற்றச்சாட்டுகளும் 2015ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின் பிரிவு 29(1)(e)-இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM20,000 முதல் RM100,000 வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிலாங்கூர் கால்நடை பராமரிப்புத் துறை அரசு வழக்கறிஞர் முகமது ஷரீஃப் சப்ரன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் ஒரு பிணையாளருடன் RM20,000 பிணைத்தொகை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் தப்பிச் செல்லும் அபாயம் குறைவு என்பதைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் குறைந்த பிணைத்தொகையைக் கோரினர்.

இதனை பரிசீலித்த நீதிமன்றம், தலா ஒரு பிணையாளருடன் ஒவ்வொருவருக்கும் RM6,000 பிணைத்தொகை அனுமதித்ததுடன் மாதத்திற்கு ஒருமுறை சிலாங்கூர் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆஜராக வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையையும் விதித்து, வழக்கின் மறு விசாரணைக்காக வரும் அக்டோபர் 8-ஆம் தேதியை நிர்ணயித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset