நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய், சீனர், இந்தியர் அல்ல; நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்களே உண்மையான எதிரி: யுனேஸ்வரன்

புத்ராஜெயா:

மலாய், சீனர், இந்தியர் அல்லது சபா, சரவா மக்கள் நாட்டின் எதிரிகள் அல்ல. மாறாக, மலேசியர்களிடையே வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுபவர்களே நாட்டின் உண்மையான எதிரிகள்.

தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் இதனை தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு முறையும் சில தரப்பினர் இனம் மற்றும் மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி மக்களிடையே அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்த முயல்கின்றனர் என்றும், ஆனால் சாதாரண மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒருவரையொருவர் வெறுப்பதில்லை.

தொழிற்சாலைகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், தோட்டங்கள், கட்டுமானத் தளங்களில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன், அவர்களது பிள்ளைகள் ஒரே பள்ளியில் கல்வி கற்று, ஒரே விளையாட்டு மைதானத்தில் விளையாடி, நாட்டின் வெற்றியை ஒன்றாகக் கொண்டாடி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

மக்களிடையே வெறுப்பைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களே நாட்டின் உண்மையான எதிரிகள் என்றும் யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவர்கள் மக்களுக்கு நம்பிக்கையை வழங்குவதில்லை; மாறாக அச்சத்தையே விதைக்கின்றனர். தீர்வுகளை முன்வைப்பதற்குப் பதிலாக இல்லாத எதிரிகளை உருவாக்கி மக்களைப் பிரிக்கும் அரசியலில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் வளர்ச்சி ஓர் இனத்தால் மட்டுமே உருவாக்கப்படவில்லை என்றும், மலாய் விவசாயிகள், சீன வணிகர்கள், இந்திய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், பூர்வகுடியினர், சபா மற்றும் சரவாக் மக்களும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்கள், பள்ளிகள், சாலைகள், தோட்டங்கள் அமைத்தவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பாதுகாப்புப் படையினர், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், தொழில்முனைவோர் மற்றும் உழைக்கும் மக்கள் என அனைவரின் பங்களிப்பும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மொழி, இனம், மதம் வேறுபட்டிருந்தாலும், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிந்திய வியர்வை ஒன்றே என்றும், வலி, வறுமை மற்றும் நம்பிக்கை ஆகியவை இனம், மதம் அல்லது தோல் நிறத்தைப் பார்த்து வேறுபாடு காட்டுவதில்லை என்றும் யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset