செய்திகள் இந்தியா
பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சிஜேபி-க்கு நான்காவது முறையாக இந்திய அரசு அழைப்பு: பதவி விலகலை வலியுறுத்தும் இளைஞர்கள்
புதுடெல்லி:
“நீங்கள் (சிஜேபியினர்) விரும்பும் எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு உங்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், “எங்கள் இளம் நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு திறந்த அழைப்பு. உங்கள் வசதிக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவின் அலுவலகத்திலோ அல்லது இல்லத்திலோ - இவ்விரண்டில் நீங்கள் விரும்பும் இடத்தில் - பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை.
பேச்சுவார்த்தையின்போது ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் நானும் உடனிருப்போம். பேச்சுவார்த்தை மூலம் நாம் தீர்வை நோக்கி முன்னேறுவோம். மாணவர்களின் நலனுக்காக அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த பேச்சுவார்த்தை இருக்கும். எனவே, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு உங்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு நான் விடுக்கும் பணிவான வேண்டுகோள் என்னவென்றால், போராட்டத்துக்குக் காரணமான பிரச்சினை, அது தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வெளிப்படையான மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவ மாணவிகளையும் இளைஞர், யுவதிகளையும் ஒன்றிய அரசின் கட்டளைப்படி காட்டுமிராண்டித்தனமாக போலிசார் தாக்கி வருகின்றார்கள். உலகெங்கும் இந்தியாவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும் நீட் தேர்வு மோசடியின் மூல கர்த்தாவாகக் கருதப்படும் கல்வி அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் எனும் கரப்பான் பூச்சி கட்சியினரின் வேண்டுகோள் குறித்து ஒன்றிய அரசு பதில் கூற மறுக்கிறது என்று கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 5:44 pm
இந்தியாவில் செயலிவழி வேலைபெறும் வீட்டுப் பணிப்பெண்கள்
July 19, 2026, 7:58 am
