நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாளை தொடங்கும் இந்திய நாடாளுமன்ற கூட்ட தொடரில் நீட் முறைகேடு, கட்சி தாவல், வந்தே மாதரம் பாடல் போன்ற விவகாரங்களால் அனல் பறக்கும்

புதுடெல்லி: 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தன. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடு, கட்சி தாவல் விவகாரங்களால் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

இதனால் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காங்கிரஸ்-தி.மு.க. இடையேயான கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சமீபத்தில் ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 

முக்கியமாக, வருமான வரி சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும். 

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத்திருத்த மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset