நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவில் ஆடம்பர சொத்து வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரோஸ்மா மறுத்தார்

கோலாலம்பூர்:

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆடம்பர சொத்து வாங்கியது தொடர்பாகக் கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் கடுமையாக மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, தொழிலதிபர் டாயிங் ஏ மாலிக் டாயிங் ரஹ்மான் நேற்று அளித்த அறிக்கையில், சொத்து வாங்கியது தொடர்பாக அவரை இணைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு காணொலி மூலம், மார்க் லான்ஸ்வின் என்ற பயனர் இந்தக் கூற்றை முன்வைத்தார்.

எக்ஸ், முகநூல் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகத் தளங்களில், எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராகக் கடுமையான, பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளைக் கொண்ட பல காணொலிகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருவதற்குப் பதிலளிக்கும் விதமாக நான் இந்த அறிக்கையை எழுதுகிறேன்.

சம்பந்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நான் முழுமையாக மறுக்கிறேன் என்பதை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறேன்.

13 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாகக் கூறப்படும் சொத்துக்கள் உட்பட, எந்தவொரு ஆடம்பர அசையாச் சொத்தையும் வாங்குதல், நிதியளித்தல், மாற்றுதல் அல்லது உரிமை கொள்ளுதல் ஆகியவற்றில் நான் எந்தக் காலத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டதில்லை. 

மேலும், எனது மருமகன் அல்லது வேறு எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் சார்பாகவும் அத்தகைய எந்தவொரு பரிவர்த்தனைக்கும் நான் நிதியளித்ததில்லை, வசதி செய்து கொடுத்ததில்லை அல்லது ஏற்பாடு செய்ததில்லை.

போலி நிறுவனங்களின் பயன்பாடு, வெளிநாட்டு நிதிக் கட்டமைப்புகள் அல்லது காணொலிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்களுடனான உறவுகள் ஆகியவற்றுடன் என்னைத் தொடர்புபடுத்த முயற்சிக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, உண்மையற்றவை,  தீய நோக்கத்துடன் புனையப்பட்டவை ஆகும் என்று ரோஸ்மா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset