செய்திகள் தமிழ் தொடர்புகள்
பொதுக்குழுவை கூட்ட சி.வி.சண்முகம் ‘திட்டம்’ - பழனிசாமியின் எதிர் வியூகம் என்ன?
சென்னை:
கட்சிக்குள் கலகம் வெடித்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி வியூகங்களை வகுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரத்தில் பொதுக்குழுவை கூட்டி விவாதம் நடத்த வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது சி.வி.சண்முகம் அணி.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், இரா.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி தவெகவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து கட்சி முடிவுக்கு எதிராகச் செயல்பட்ட நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளை பறித்து, அந்த இடங்களில் தனது ஆதரவாளர்களை பழனிசாமி நியமித்தார். அதேநேரம், பழனிசாமியின் நடவடிக்கைகள் செல்லாது என அறிவித்த சண்முகம் தரப்பு, பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டினார் பழனிசாமி.
இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், கருப்பண்ணன் உட்பட பழனிசாமிக்கு ஆதரவளிக்கும் 21 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வெல்லமண்டி நடராஜன், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டதன் காரணமாக, அதிமுகவில் 47 பேரும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்கு முழுமுதற் காரணமாக விளங்கும் பழனிசாமிக்கு, மாவட்ட செயலாளர்களும், தலைமை கட்சி செயலாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அதேபோல், பழனிசாமிக்கு அனைவரும் தங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதிபட தெரிவித்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என பொதுச் செயலாளர் பழனிசாமி இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார். நடந்து முடிந்த தேர்தலில் ஒரு நாகரிகமான வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம், நாம் படுதோல்வி அடையவில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தோல்வியடைந்துள்ளனர். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் தான் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு பற்றிய பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய நிலையில், வேலுமணி தரப்பு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவை ஒருங்கிணைக்க மறுத்து, வலிமையான கூட்டணியை அமைக்காத காரணத்தால் தோல்வியடைந்துள்ளோம். அப்போதே நாங்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொன்னோம். தவெக சார்பாகவும் கூட்டணி அமைக்க நம்மோடு பேசினார்கள். ஆனால், கூட்டணி பேச வந்தவர்களை பழனிசாமி உதாசீனப்படுத்தினார். தன் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதால், இப்போது பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் பழனிசாமி. அதற்காகவே நாங்கள் பொதுக்குழுவை கூட்ட சொல்கிறோம். பொதுக்குழுவை கூட்டி இரு தரப்பும் கருத்துகளை தெரிவிப்போம், பெரும்பான்மை உறுப்பினர்கள் எதனை ஏற்றுக் கொள்கிறார்களோ அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
அதிமுக சட்டவிதிகளின் படி 5-ல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று பொதுச்செயலாளரிடம் கொடுத்தால், பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்டவேண்டும் என உள்ளது. ஆனால் சர்வாதிகாரமாக பழனிசாமி அதனை ஏற்க மறுக்கிறார். நாங்கள் பேசத் தயார், ஆனால் பொதுக்குழுவை கூட்டி விவாதம் செய்ய வேண்டும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உள்ளுக்குள் பல சமாதான முயற்சிகள் நடந்தும் பழனிசாமி, வேலுமணி என இரு தரப்பும் இறங்கி வருவதற்கான அறிகுறிகள் எதனையும் காணவில்லை. எனவே இரு தரப்பும் மோதலுக்கு தயாராகி விட்டதாகவே தெரிகிறது. பொதுச் செயலாளர் அதிகாரம் தன்னிடமே உள்ளது என்பதால், வேலுமணி தரப்பை மிரட்டி வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என கணக்குப் போடுகிறார் பழனிசாமி. ஆனாலும், இருக்கும் அனைவரையும் இழந்துவிட்டால் இனி எப்படி கட்சி நடத்துவது என்ற அச்சமும் அவரிடம் இல்லாமல் இல்லை. அதனால்தான் ‘பேசித் தீர்க்கலாம்’ என்று சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனாலும், பொதுக்குழுவை கூட்டியே தீர வேண்டும் என்ற முடிவில் வேலுமணி தரப்பு திடமாக உள்ளது. பொதுக்குழுவை கூட்டினால், அது தனது பொதுச்செயலாளர் பதவிக்கே ஆபத்தாக முடியும் என கருதுகிறார் பழனிசாமி. எனவே, பொதுக் குழுவை தற்போது கூட்டும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது பழனிசாமி தரப்பு.
அதே நேரத்தில், தவெகவை ஆதரிக்கும் முடிவில் வேலுமணி தரப்பு உறுதியாக உள்ளது. ஆனால், தவெக ஆகவே ஆகாது என்று பழனிசாமி அழுத்தமாக நிற்கிறார். ஒருவேளை தவெக அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற்றால், ‘குதிரை பேர’ வழக்கில் சிக்கும் அபாயமும் ஏற்படலாம். இது வேலுமணி தரப்புக்கு மட்டுமல்ல, தவெக அரசுக்கும் சிக்கலாகும் என பழனிசாமி தரப்பு ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
பழனிசாமி, வேலுமணி தரப்பு இரண்டுமே தங்கள் பிடியில் தளராமல் நிற்கிறார்கள். எனவே, அதிமுகவில் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் பல பூகம்பங்கள் வெடிக்கலாம்.
ஆதாரம்: தி ஹிண்டு தமிழ்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
