நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஸ்டாலின் தோல்விக்குக் காரணம் சேகர் பாபு; அவர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை:

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்விக்குக் காரணம் சேகர் பாபு என திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தார். அதுமட்டுமின்றி, திமுக அமைச்சர்கள் உள்பட முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தோல்விக்குக் காரணம் சேகர் பாபு என எழும்பூர் தொகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ ஐ பரந்தாமன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட பதிவில், “தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை. இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக. ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சண்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.

தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு?” என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset