நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்

தெஹ்ரான்:

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பல வாரங்கள் இடையூறுக்குப் பின்னர், ஈரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையம், 15 வெளிநாட்டு இடங்களுக்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியதாக, சின்ஹுவா செய்தி நிறுவனம், அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி நேற்று தெரிவித்துள்ளது.

இஸ்தான்புல் (துருக்கியே), பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ, ஷென்சேன் (சீனா), பேங்காக் (தாய்லாந்து), மஸ்கட் (ஓமான்), எர்பில் (ஈராக் குர்திஸ்தான் பிராந்தியம்), காபூல் (ஆப்கானிஸ்தான்), மாஸ்கோ (ரஷ்யா), டோஹா (கத்தார்), பாக்தாத், நஜாஃப் (ஈராக்), மடீனா (சவுதி அரேபியா), யெரெவான் (ஆர்மீனியா) ஆகிய 15 இடங்களுக்கான விமான பயணச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டதாக, இமாம் கோமெய்னி விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரமின் காஷெஃப்-அஸார் தெரிவித்தார்.

அந்த விமான நிலையத்தின் இரண்டு முனையங்களிலும், வருகை தரும், புறப்படும் பயணிகளைப் பெறுவதற்கும், அவர்களைக் கொண்டு செல்வதற்கும் தொடர்புடைய அனைத்து செயல்முறைகளும் தற்போது பாதுகாப்பாக நடைபெறுவதாக அவர் உறுதியளித்தார்.

பிப்ரவரி 28 ஆம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் தனது வான்பரப்பை மூடி நாடு முழுவதும் சிவில் விமானச் செயல்பாடுகளை நிறுத்தியது.

ஏப்ரல் 18 ஆம் தேதி, ஈரான் தனது வான்பரப்பின் கிழக்குப் பகுதியைச் சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் திறந்தது. மற்ற விமான நிலையங்களில் விமானங்கள் கட்டம் கட்டமாக மீண்டும் தொடங்கப்பட்டன.

ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், இராணுவ, சிவில் அதிகாரிகளால் தொழில்நுட்ப, செயல்பாட்டு ஏற்பாடுகள் முடிந்தவுடன், விமானச் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரிவித்தது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset