நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜகார்த்தா விமான நிலையத்தில் பரபரப்பு: மேற்கூரை இடிந்து விழுந்ததில் அருவி போலக் கொட்டிய மழைநீர்

ஜகார்த்தா: 

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சுகர்ணோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், பெய்த கனமழை காரணமாக முனையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கடந்த திங்கட்கிழமை மதியம் 1:40 மணியளவில் முனையம் 3-இன் புறப்பாட்டுப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. மேற்கூரை வழியாகத் தண்ணீர் கசிந்து திடீரென சீலிங் (Ceiling) பலகைகள் சரிந்து விழுந்ததால், அங்கிருந்த பயணிகள் பீதியடைந்து சிதறி ஓடினர்.

இந்தச் சம்பவத்தின்போது தண்ணீர் அருவி போலக் கொட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மோசமான வானிலை, பலத்த காற்று காரணமாக, விமான நிலையத்திற்கு வரவிருந்த சில விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

சுமார் ஐந்து நிமிடங்கள் நீடித்த இந்த அசாதாரண சூழலைத் தொடர்ந்து, விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து அந்தப் பகுதியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், விமான நிலையத்தின் தரைத்தளம், இதரப் பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தூய்மைப் பணிகளுக்குப் பிறகு விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீண்டும் வழக்கம் போலத் தொடர்ந்தன. இருப்பினும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு விமான நிலையத்தில் இத்தகைய விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset