நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியாவின் மேலும் ஆறு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் தூதர்

கோலாலம்பூர்: 

தற்போது ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவித்து வரும் மலேசியாவின் மேலும் ஆறு கப்பல்கள், கட்டம் கட்டமாக அந்த நீர்ப்பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று மலேசியாவுக்கான ஈரான் தூதர் வலியுல்லா மொஹம்மதி நஸ்ராபாதி தெரிவித்தார்.

"நாங்கள் (ஈரான்) அந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றாக அந்தப் பாதை வழியாகச் செல்ல அனுமதிப்போம்" என்று அவர், செவ்வாய்க்கிழமை இங்கு நடைபெற்ற கோலாலம்பூர்-அங்காரா உரையாடல் 2026 நிகழ்வுக்கு வெளியே சந்தித்தபோது பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இதற்கு முன்னர், பிராந்திய சூழ்நிலையின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து முன்னர் ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவித்த மலேசியாவுக்குச் சொந்தமான ஏழு கப்பல்களில் ஒன்று பாதுகாப்பான பாதை வழங்கப்பட்டு, தற்போது அது தனது இறுதி இலக்கை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்து வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

இது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமுக்கும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியானுக்கும் இடையே மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாட்டைத் தொடர்ந்து ஏற்பட்டது. இதுவே, மலேசியாவின் ஏழு கப்பல்களுக்குத் தங்கள் பயணத்தை மீண்டும் தொடர அனுமதியைப் பெறுவதற்கு வழிவகுத்தது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் உலகின் 20 சதவீத மூல எண்ணெய், எரிவாயு கடந்து செல்லும் ஒரு மூலோபாய குறுகிய பாதையாகும். கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் இந்தப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடையூறு எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதுடன் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது, இதனால் பரந்த பொருளாதார தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

"விரோதமற்ற"தாகக் கருதப்படும் நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட கப்பல்களின் பாதுகாப்பான பாதையை உறுதி செய்வதற்கு தாம் வசதி செய்து தருவதாகவும் அது வலியுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset