நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிற்சாலையில் ரகசியமாக நடந்த போதைப்பொருள் வணிகம்: சுங்கத்துறையினரின் சோதனையில் மூவர் கைது

ஜொகூர் பாரு:

ஜொகூர் பாரு, கெம்பாஸ் பகுதியில் 'கெத்தும்' இலைகளைப் பதப்படுத்தி போதை பானம் தயாரித்த சட்டவிரோதக் கூடத்தை மாநிலச் சுங்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிரடிச் சோதனையின் மூலம் அந்த ரகசியக் கும்பலின் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ளன. 

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளில், சுமார் RM76,796 ரிங்கிட் மதிப்பிலான போதை இலைகளும், திரவப் பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

முதற்கட்டமாக கெம்பாஸ் டெனாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மேலாளராகச் செயல்பட்ட ஒரு உள்ளூர் ஆணும், அவருக்கு உதவியாக இருந்த இரண்டு இந்தோனேசியப் பெண்களும் கைது செய்யப்பட்டனர். 

அங்கிருந்து 103 கிலோகிராம் எடையுள்ள கெதும் இலைகளும், 189 லிட்டர் போதை பானங்களும் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து கெம்பாஸ் உதாமாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், பூட்டப்பட்டிருந்த வளாகத்திற்குள் 150 பானைகள், 50 அடுப்புகள், 200 எரிவாயுடன், பெரும் அளவிலான போதை இலைகள் கண்டெடுக்கப்பட்டன.

விசாரணையில், இந்தச் சட்டவிரோதக் கும்பல் வாடகை வீடுகளை விற்பனை இடமாகவும், தொழிற்சாலை வளாகத்தைப் போதை பானம் தயாரிக்கும் கூடமாகவும் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. 

ஒரு போத்தல் போதை பானம் சுமார் 16 வெள்ளிக்கு உள்ளூர்வாசிகளுக்கு விற்கப்பட்டதும், இதற்கான இலைகள் கெடா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச் சோதனையில் ஒட்டுமொத்தமாக 545 கிலோகிராம் இலைகளும், 1,800 லிட்டருக்கும் அதிகமான போதை திரவமும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு ஒரு லட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என ஜோகூர் சுங்கத்துறை இயக்குநர் அமீனுல் இஸ்மீர் முஹம்மது சொஹைமி கேட்டுக்கொண்டுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset