நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கோடிக்கணக்கான மதிப்புள்ள கலைப்படைப்புகள் மீட்பு: அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் ‘1எம்.டி.பி” சொத்துக்கள்

கோலாலம்பூர்:

1மலேசியா வளர்ச்சி பெர்ஹாட் (1MDB) நிதி முறைகேடு வழக்கின் முக்கிய சாட்சியான ஜாஸ்மின் லூ என்பவரால் வாங்கப்பட்ட, பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நான்கு ஆடம்பர ஓவியங்கள் விரைவில் மலேசியாவிற்கு கொண்டு வரப்படவுள்ளன. இதில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோவின் அரிய படைப்பும் அடங்கும்.

சொத்து மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த இயக்குனர் டத்தோ முஹம்மத் ஜம்ரி ஜைனுல் அபிதின் இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சோத்பீஸ் நிறுவனத்தின் வசம் இருந்த இந்த ஓவியங்கள், தற்போது மலேசியாவிற்கு அனுப்பப்படும் பணியில் உள்ளன. இவை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் கண்டறியப்பட்ட 12 ஓவியங்களில், தற்போது முதற்கட்டமாக இந்த நான்கு ஓவியங்கள் கொண்டு வரப்படுகின்றன. எஞ்சிய ஓவியங்கள் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஏல நிறுவனங்களின் வசம் உள்ளன.

அமெரிக்க நீதித்துறை, எஃப்.பி.ஐ (FBI) ஆகியவற்றுடன் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், சுமார் RM14 கோடி ரிங்கிட் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள இந்த ஓவியங்களை மலேசியாவிடம் ஒப்படைக்க உடன்பாடு எட்டப்பட்டது.

இதில் சுவிட்சர்லாந்தில் விற்கப்பட்ட ஒரு ஓவியத்தின் மூலம் கிடைத்த RM2.6 கோடி ரிங்கிட் பணம், அங்கேயே ஒரு சட்ட நிறுவனத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்படவுள்ள ஓவியங்களில் பிக்காசோவின்'எல்'எகுயேர் எட் லெஸ் க்ளவுன்ஸ்' (1961), ஜோன் மிரோ, ஹென்றி மாட்டிஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த கலைஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஓவியங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமான பரஸ்பர உதவி ஒப்பந்தத்தின் கீழ் மலேசியாவிற்குத் திரும்பக் கொண்டு வரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset