நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கலைஞர்களின் சேவையைப் போற்றும் மலேசியா: பி. ரம்லியின் 97-வது பிறந்தநாளில் சிறப்பு அங்கீகாரம்

கோலாலம்பூர்:

மலேசியாவின் மாபெரும் கலைஞர் மறைந்த டான்ஸ்ரீ பி. ரம்லி அவர்களின் நினைவாகவும், நாட்டின் கலைத்துறைக்கு வலுசேர்க்கும் கலைஞர்களின் சேவையைப் போற்றும் வகையிலும் மார்ச் 22-ஆம் தேதி 'கலைஞர்கள் தினமாக' கொண்டாடப்படுகிறது. 

சமூகத்தை ஒன்றிணைக்கும் படைப்பாற்றல், கலாச்சார விழுமியங்களை நிலைநிறுத்தும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக இத்தினம் அமைகிறது எனத் தகவல் அமைச்சு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மறைந்த கலைஞர் பி. ரம்லி அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு மலேசிய தேசிய ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பில், அவர் நடிப்பு, இயக்கம், இசை என அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த ஒரு பன்முகத் திறமையாளர் எனப் புகழாரம் சூட்டியுள்ளது. 

பினாங்கு மாநிலத்தில் பிறந்த இவருக்கு, 1930-களில் தொடங்கி 1940-களின் பிற்பாதி வரை பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்ற வரலாற்றுப் பின்னணி உள்ளது. குறிப்பாக, ஜப்பானிய கடற்படைப் பள்ளி, பினாங்கு இலவச பள்ளி ஆகியவற்றில் அவர் பயின்ற கல்வி முறைகள் அவரது ஆளுமையைச் செதுக்கியுள்ளன.

பி. ரம்லி அவர்களின் திரைப்படங்கள், பாடல்கள் இன்றும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ரசிக்கப்படுவதற்கு அவர் விதைத்த 'ஒற்றுமை' எனும் உணர்வே முக்கியக் காரணமாகும். 

இனப் பாகுபாடின்றி மலேசிய மக்கள் அனைவரையும் தனது கலைப் படைப்புகளால் கட்டிப்போட்ட அவரது பாணி இன்றும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. எதிர்காலக் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இத்தினம் ஒரு அடையாலமாகக் கருதப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset