நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத–இன உணர்வுகளைத் தூண்டாதீர்கள்: ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

ஜார்ஜ் டவுன்: 

மலேசியா பல்வேறு இனங்கள், மதங்களை அடிப்படையாகக் கொண்ட நாடாகும். எனவே எந்தக் கட்சியும் தங்களை வீரர்களாகக் காட்டிக்கொண்டு மத அல்லது இன உணர்வுகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று புகிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

“இத்தகைய தூண்டுதல்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக, நாட்டைப் பாதிக்கக்கூடிய கோபத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும்,” என்று அவர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 3 அன்று தனது முகநூல் பதிவில் கூறினார்.

தான் அரசியலில் ஈடுபட்டதிலிருந்து இனமோ மதமோ பார்க்காமல் அனைத்து மலேசியர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே தனது நோக்கமாக இருந்து வருகிறது என்றும் சிம் தெரிவித்தார்.

பினாங்கு மாநில DAP தலைவராகவும் பதவி வகிக்கும் சிம், மார்ச் 7 அன்று புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன்புள்ள இந்து கோயிலில் நடைபெறவிருந்த ‘Ops Terjah’ என்ற போராட்டம் குறித்த சமூக ஊடக பதிவுக்குப் பதிலளித்தார்.

இந்தத் திட்டமிடப்பட்ட கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரும் கலவரத்தை உருவாக்குவதில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எந்தவொரு தூண்டுதலான கூட்டமும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க போலிசாரிடம் கேட்டுக்கொண்டதாகவும் சிம் தெரிவித்தார்.

இதற்கிடையில், மாநில PKR இளைஞர் பிரிவும் இந்தத் திட்டமிடப்பட்ட கூட்டத்தைக் கண்டித்துள்ளது. இதை பொறுப்பற்ற செயலாகவும், பதற்றத்தைத் தூண்டும் அபாயம் உள்ளதாகவும் அதன் தலைவர் முஹம்மத் சக்வான் முஸ்தபா கமால் எச்சரித்துள்ளார்.

“இந்தச் சம்பவம் அரசியல் ஆதாயத்திற்காக மத உணர்வுகளைப் பயன்படுத்தும் ஒரு பொறுப்பற்ற செயலாக தெரிகிறது. பினாங்கு அரசியலுக்கான சோதனை மையமல்ல,” என்று அவர் நேற்று  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“சட்ட ஆட்சி நிலவும் நாட்டில், எந்த நபருக்கோ, குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ ‘அதிகாரமற்ற அமலாக்க அதிகாரம்’ போல் செயல்பட உரிமை இல்லை,” என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டமிடப்பட்ட போராட்டம் தொடர்பாக சட்ட மீறல், அத்துமீறல், மிரட்டல் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் சக்வான் வலியுறுத்தினார்.

“சட்ட மீறல்கள் இருப்பின், எந்த சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset