நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை டுவா குடியிருப்பில் பெண் கொலை விவகாரம்: பொறாமை காரணமா? போலீஸ் விசாரணை தீவிரம்

ஜார்ஜ்டவுன்:

பட்டர்வொர்த், சுங்கை டுவா பகுதியில் உள்ள ஸ்ரீ முர்னி குடியிருப்பில் (Flat Sri Murni) ஒரு பெண் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டச் சம்பவம், பொறாமை காரணமாக நடந்திருக்கலாம் என்று போலீசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்காக ஒரு வெளிநாட்டவர் உட்பட மூன்று ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பினாங்கு மாநில காவல்துறை தலைவர், டத்தோ அசீஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

“போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மூவரின் கைது மூலம் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று நம்புகிறோம்.

“இதுவரை புதிய சந்தேக நபர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. கூடுதல் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

“இந்தக் கொலை சம்பவம் காதல் உறவு, பொறாமையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இருப்பினும், விசாரணை நடைபெற்று வருவதால் இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது,” என்று அவர் இன்று தெரிவித்தார்.

38 முதல் 45 வயதுக்கிடையில் உள்ள மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் சுயதொழில் புரிபவராகவும், மற்றவர்கள் கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இவர்களை பிப்ரவரி 11 வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என அசீஸி கூறினார்.

இந்த வழக்கு, குற்றச் சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, ஸ்ரீ முர்னி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் 41 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அவர் ஒரு படுக்கையறையில் படுத்த நிலையில் காணப்பட்டார். அவரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset