செய்திகள் இந்தியா
இந்தியத் தலைநகரில் புத்தாண்டு கொண்டாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 285 பேர் கைது: ஆயுதங்கள், போதைப் பொருள் பறிமுதல்
புதுடெல்லி:
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், டெல்லி காவல்துறை 'ஆகாத்' நடவடிக்கை என்ற பெயரில் நேற்று இரவு முதல் ஒரு பெரிய தேடுதல் நடவடிகையை மேற்கொண்டுள்ளது.
இதில் 285 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும், ஆயுதங்கள், போதைப்பொருட்கள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறை டெல்லி முழுவதும் நேற்று ஒரே இரவில் தேடுதல் வேட்டையை மும்முரமாக நடத்தியது.
தென்கிழக்கு டெல்லி காவல்துறையால் 'ஆகாத் 3.0' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள், தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு தொடர் குற்றவாளிகள் குறிவைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, ஆயுதச் சட்டம், கலால் சட்டம், என்டிபிஎஸ் சட்டம், சூதாட்டச் சட்டம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் 285 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தவிர, புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்படக்கூடிய குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 504 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைகளின் போது ஐந்து வாகனத் திருடர்களையும் காவல்துறை கைது செய்தது.
மேலும், 21 நாட்டுத் துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், 27 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. போதைப்பொருட்கள், சட்டவிரோத மதுபானப் பொருட்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது. இதன் மூலம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக போதைப்பொருட்களை சந்தையில் புழக்கத்தில் விட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையின்போது, திருடப்பட்ட 310 மொபைல் போன்கள், 231 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை காவல்துறையால் மீட்கப்பட்டன என்று டெல்லி போலிசார் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 6:32 pm
நீட் வினாத்தாள் கசிவு முதல்... அமைச்சர் ராஜினாமா வரை: இந்திய அரசை உலுக்கிய இளைஞர் படை
July 25, 2026, 10:50 am
ஆகஸ்ட் 1 முதல் திருப்பதி கோயில் குளத்தில் நீராடத் தடை விதிப்பு
July 22, 2026, 5:44 pm
