
செய்திகள் கலைகள்
சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் படம், மாநாடு: சீமான்
சென்னை:
சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் படம், மாநாடு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டு களித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது.
மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத் திரைப்படத்தைத் தந்திருக்கிறார், தம்பி வெங்கட் பிரபு.
இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறப்போக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த் தெறியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத் திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.
சொல்ல வந்த செய்தியை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட்பிரபுவின் கலைத்திறன் இத் திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.
தம்பி சிலம்பரசன் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம் கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல்மொழி யாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப் பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறைகொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மன மகிழ்வடைகிறேன்.
அன்புச் சகோதரன் எஸ்.ஜே.சூர்யா எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத்திறனாலும் படத்தை தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்!
தம்பி யுவன் சங்கர் ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீனீன் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன.
இத் திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்றுகாட்டி, வெற்றிப்படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் தம்பி சுரேஷ் காமாட்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன். எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம்பூரிப்பு அடைகிறேன்.
நானே வெற்றிபெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். இப் படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 11, 2025, 7:04 pm
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடாது: கூகுளுக்கு உத்தரவு
September 9, 2025, 2:18 pm
இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை
September 8, 2025, 4:56 pm
மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் படம்
September 8, 2025, 2:58 pm
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
September 6, 2025, 7:11 pm
"The Voice of Hind Rajab": கண்ணீர்மல்க 23 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்
September 6, 2025, 11:10 am
கவிஞர் மு. மேத்தாவும் இசைஞானி இளையராஜாவும்
September 5, 2025, 10:25 pm
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்
September 3, 2025, 5:44 pm
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு
September 2, 2025, 4:32 pm
சின்மயி பாடிய முத்த மழை பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை
September 1, 2025, 5:11 pm