செய்திகள் இந்தியா
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
முசாபர்பூர்:
'பாஜக எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். மக்களின் வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்' என பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று முசாபர்பூரில் நடைபெற்ற யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருடன் திறந்த காரில் சென்று மக்களை சந்தித்தார்.
ராகுல் காந்தி அவர்களைப் பொறுத்தவரைக்கும், சும்மா அரசியலுக்காக - மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் - மிகுந்த கவனத்துடன் பேசுபவர் அவர்.
இப்போது ஏன் பாஜகவினர் அவர் மேல் பாய்கிறார்கள் என்றால், பாஜக - தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பாஜகவிர் அவர் மேல் பாய்கிறார்கள்.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதைத்தான் பிஹாரில் இப்போது கூடியிருக்கும் இந்தக் கூட்டம் எடுத்துக் காட்டுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கிருக்கும் பாட்னாவில்தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்த பாஜகவின் கர்வத்தை தகர்த்த இடம்தான் இந்த பிஹார்.
400 இடம் என்று கனவு கண்டவர்களை, 240-இல் அடக்கியது இண்டியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள், மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்று, மீண்டும் பிஹார் நிரூபிக்க வேண்டும்.
அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே… நீங்கள் இன்றைக்கு இந்தியாவுக்கான வழக்கறிஞராக இருக்கிறீர்கள். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும்!
மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று சகோதரர் தேஜஸ்வீ காட்டிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் இரண்டு பேரும் பிஹாரில் பெறப்போகும் வெற்றிதான், இண்டியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது.
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும் நிச்சயமாக - உறுதியாக நானும் பங்கேற்பேன்” என தெரிவித்தார்.
பிஹார் பிரச்சாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘ பிஹார் வந்தடைந்தேன். மதிப்பிற்குரிய லாலு பிரசாத்தின் மண் கண்ணில் தீயுடன் என்னை வரவேற்கிறது. களவாடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் கனத்தையும் மண்ணில் உணர முடிகிறது.
அன்பு இளவல்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன், மக்களின் வலியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக மாற்றும் வாக்கு அதிகாரப் பயணத்தில் நானும் இணைந்தேன்’ என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
