நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது: சம்பய் சோரன் புதிய முதல்வராகிறார்

ராஞ்சி: 

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

ஜனவரி 28, 29-ம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஹேமந்த் சோரன், அங்கிருந்து ராஞ்சிக்கு ரகசியமாக திரும்பினார். 

அவர் விமானத்தில் வராமல், தனி காரில் ரகசிய வழியாக வந்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். 

ஆனால், முதல்வரிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஏற்கெனவே, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவ படையினர், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஞ்சியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பிற்பகல் 2 மணி முதல் முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து ஜேஎம்எம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநரிடம் ராஜினாமா கடிதம்:

முன்னதாக, முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். 

இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் பதவியேற்க உள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்பதற்கான ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏக்கள் வழங்கினர்.

புதிய முதல்வர் சம்பய் சோரன்

ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சம்பய் சோரன். செராய் கெல்லா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பய் சோரனுக்கு 67 வயது ஆகிறது.

தற்போது அவர் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.

இதுவரை 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset