செய்திகள் மலேசியா
பழனிபாபா அனைவருக்குமான போராளி: நினைவேந்தல் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ எம் சரவணன்
கோலாலம்பூர்:
அல்ஹாஜ் அஹ்மத் அலி எனும் பழனி பாபா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. ம இ கா துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், பழ கருப்பைய்யா, சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது பாகவி, மாப்பின் இயக்கத்தின் தலைவர் சேகு அஸ்மின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
ம இ கா துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், உரையாற்றுகையில், எனக்கும் தமிழ் முஸ்லிம் சகோதரர்களுக்குமான உறவு என்பது இன்று நேற்றல்ல, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து துவங்கியது.
எனது பள்ளிப் பருவத்தில் ஹரி ராயா வந்துவிட்டால் நாங்கள் வாழ்ந்த கம்போங் பாரு பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து அங்குள்ள வீடுகளுக்கு ஒன்றுவிடாமல் சென்று பெருநாள் பணத்தை வாங்குவோம். நான்கைந்து சிறுவர்கள் சேர்ந்துகொண்டு அலி என்ற நண்பனுடன் டூயட் ராயா வாங்க புறப்படுவோம். அப்போது 5 காசு, 10 காசு கொடுப்பார்கள். அதை மொத்தமாக சேர்த்தால் 5 வெள்ளி அல்லது 6 வெள்ளி கிடைக்கும். அந்த காசு எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தரும்.
அதேபோல் எங்கள் அண்டை வீட்டுக்காரர் கூத்தாநல்லூரை சேர்ந்த நூர் மொஹைதீன் என்ற இந்திய முஸ்லிம். அவர் எம் எஸ் அலி கடையின் பண்டாரியாக வேலை பார்த்தார். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவர் வீட்டுக்கு வரும்போது நெய்சோறு, பிரியாணி, இறைச்சி என்று சாயங்காலம் கொண்டுவருவார். நாங்கள் ஏழையாக இருந்தாலும் பணக்காரர்களை போல் நெய்சோறு சாப்பிட்டு வளர்ந்தவர்கள்.
என் வாழ்நாளில் மூன்றாவது இந்திய முஸ்லிம் அப்துல் ரசாக், அவரது உணவுக்கடையில் நான் வேலை பார்த்தேன். காலையில் கடையை நான்தான் திறப்பேன். முதல் நாள் இரவு ரொட்டி சுட்டு ஸ்டோரில் வைத்துவிட்டு சென்றுவிடுவோம். இப்போது போல் அப்போது ஐஸ் பெட்டி கிடையாது. அடுத்த நாள் அதை எப்படி சூடு காட்டி பயன்படுத்துவது என்று அந்த பாய் எனக்கு சொல்லி கொடுத்தார். என் இளமை பருவத்து இந்திய முஸ்லிம்களின் தொடர்பை இன்றளவும் என்னால் மறக்க முடியாது.
தைப்பூசத்தில் காவடி எடுத்துவிட்டு முருகனை வழிபட்டுவிட்டு இதோ இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
நான் படிக்கிற காலத்தில் பழனி பாபாவின் பேச்சுக்களை கேட்டு வளர்ந்தவன். அவர் பேசிய ஒரு கேசட் மட்டும் முதலில் எனக்கு கிடைத்தது. அவரது இயல்பான தமிழும் நரம்புகளை சூடேற்றும் பேச்சும் அப்போது என்னை மிகவும் கவர்ந்தது.
நான் சேகரித்த அவரது பேச்சு கேசட்டுகளைப் போல் மலேசியாவில் வேறு யாரும் சேர்த்திருக்க மாட்டார்கள். ஒன்றுவிடாமல் அவரது உரைகள் அடங்கிய கேசட்டுகளை அள்ளி வந்துவிடுவேன்.
அதன்பிறகு அவரது கேசட்டுகளை நான் தேடித் தேடி கேட்க ஆரம்பித்தேன். சென்னைக்கு போனால் தி நகரில் ஒரு கேசட் கடை இருக்கும். அங்கு போய் அவரது பேச்சுக்கள் அடங்கிய டிடிகே கேசட்டுக்களை கொண்டு வந்து கேட்பேன். அவர் எம்ஜிஆர், கருணாநிதி, என்று அனைத்து தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர். அவர் முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல அனைவருக்காகவும் குரல் கொடுத்தவர்.
அனைத்து இன மக்களுக்காக குரல் கொடுப்பவராகவும் போராடுபவராகவும் அவர் திகழ்ந்தார் என்பது அவர் சரித்திரத்தை பார்த்தால் தெரியும். அவர் இந்து முஸ்லீம் என்று பிரித்து பார்க்கவில்லை. அவர் கொலை செய்யப்படும்போது கூட அவர் ஓர் ஹிந்து நண்பரின் வீட்டில் இருந்து வெளியில் வந்தபோதுதான் கொல்லப்பட்டிருக்கிறார். தமிழுக்காக, சமூகத்திற்காக இணங்கி வாழவேண்டும் என்று சொல்லி சென்றுள்ளார் பழனிபாபா. இவ்வாறு டத்தோஸ்ரீ எம் சரவணன் உரையாற்றினார்.
முன்னதாக சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது பாகவி அவருடன் தமக்கு இருந்த நட்பு குறித்தும் அவரோடு சேர்ந்து பேசிய கூட்டங்கள் குறித்தும் நினைவுகூர்ந்தார். சமுதாயம் குறித்து கவலை கொண்டவராகவும் ஒடுக்கப்பட்ட எல்லா இனங்களுக்கு குரல் கொடுப்பவராகவும் அஞ்சா நெஞ்சினராகவும் அவர் திகழ்ந்தார்.
அவர் தாம் மத விரோதிககளால் படுகொலை செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பிலும் அதை எதிர்பார்த்தும் வாழ்ந்தார். யாருக்கும் பயந்தவராக இல்லாமல் வீறுகொண்ட சிங்கத்தை போன்று வாழ்நாளெல்லாம் இவரை கண்டும் அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்தி வாழ்ந்தார். தவறு என்று தெரிந்தால் தயங்காமல், யார் எவர் என்று பாராமல் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்காதவர் என்று கம்பம் பீர் முஹம்மது பாகவி பேசினார்.
நிகழ்ச்சியை ஆர் டி எம் அப்துல் கனி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm