நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அழகான சித்திரம்..! - வெள்ளிச்சிந்தனை 

நபித்தோழர்களின் கேள்விக்குப் பதிலளிக்கின்ற போது நபிகளார்(ஸல்) கூறினார்கள்:

என்னுடைய அதிபதி எனக்கு ஒன்பது விஷயங்களை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டிருக்கின்றான்:

1. மறைவிலும் வெளிப்படையிலும் எல்லா நிலைகளிலும் இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ள வேண்டும். 

2. அன்பு நிறைந்திருந்தாலும் கோபம் மிகைத்தாலும் இரண்டு நிலைமைகளிலும் சத்தியத்தையே, நீதி செறிந்த கருத்துகளையே பேச வேண்டும். 

3. வளமையிலும் சரி, வறுமையிலும் சரி எல்லா நிலைமைகளிலும் நேர்மையிலும் நடுநிலையான நடத்தையிலும் நிலைத்திருக்க வேண்டும். 

4. எவர் என்னுடன் உறவை முறித்துக்கொள்கின்றாரோ நான் அவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும். 

5. என் மீது வரம்பு மீறி நடந்துகொள்கின்றவரை நான் மன்னித்து விட வேண்டும். 

6. எனக்கு எதுவும் வழங்காமல் புறக்கணிப்பவருக்கு நான் வழங்க  வேண்டும். 

7. என்னுடைய மௌனம் ஆராய்ந்து உணர்வதாய், சீர் தூக்கிப் பார்ப்பதாய் ஆகி விட வேண்டும். 

8. என்னுடைய பார்வை படிப்பினை தருவதாய் இருக்க வேண்டும். 

9. என்னுடைய உரையாடல் இறைவனின் நினைவு சார்ந்ததாய் ஆகி விட வேண்டும். நன்மையை ஏவ வேண்டும். தீமையைத் தடுக்க வேண்டும். 

விளக்கம்

நபிகளார்(ஸல்) தம்முடைய உரையாடலில் எத்தகைய ஒன்பது குறிப்புகளை குறிப்பிட்டிருக்கின்றார்களோ அவற்றிலிருந்து இஸ்லாமிய போதனைகளின் இயல்பை மிகச் சிறப்பாக கணித்துக் கொள்ள முடியும். 

இஸ்லாம் பரந்த மனப்பான்மையை, விரிந்த பார்வையை, அகன்ற இதயத்தை தான் போதிக்கின்றது. இஸ்லாம் எல்லா வகையான குறுகிய பார்வைகளை விட்டும், மேம்போக்கான நடத்தைகளிலிருந்தும், சொற்பமான கொள்திறனிலிருந்தும் நம்மை விடுவிக்கவே விரும்புகின்றது. 

நாம் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த சிகரங்களை வென்றெடுக்க வேண்டும் என்றே  அது விரும்புகின்றது. நன்னடத்தையின் உச்சத்தைத் தொட வேண்டும் என்றே அது எதிர்பார்க்கின்றது. மனிதத்தின் மிஃராஜை - உச்சத்தை அடைய வேண்டும் என்றே அது விரும்புகின்றது. 

நபிகளாரின் உரையாடலிலிருந்து ஒரு இறைநம்பிக்கையாளன், இறைப்பற்று மிக்கவன், இறைநெருக்கத்தில் திளைப்பவன் எப்படி இருப்பான் என்பது பற்றிய அழகிய சித்திரத்தை நம்மால் உணர முடிகின்றது. அது எத்துணை அழகான, நேர்த்தியான சித்திரம் எனில் அதைப் போன்ற ஒன்றை எவராலும் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. 

ஒற்றுமை, இணக்கம், அன்பு ஆகியவைதாம் இஸ்லாம் தருகின்ற செய்தி. மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனில் உன்னதத்தையும் உத்தம நிலையையும் அடைய வேண்டும் எனில் தியாகமும் அர்ப்பணிக்கும் பண்பும், உயர்ந்த சிந்தனையும், கனிந்த பார்வையும், பரிவான நடத்தையும், அன்பான பேச்சும் இன்றியமையாதவை. 

- மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்

தொடர்புடைய செய்திகள்

+ - reset