நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஆவடி நாசர் நீக்கம்; டிஆர் பாலுவின் மகன் ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்

சென்னை: 

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி சா.மு.நாசர் நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா இன்று பதவியேற்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் இன்று செய்து வைக்கிறார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு மாற்றப்பட்டது. 

பிறகு, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்பட்டன. 

அதே நேரம், கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதுதவிர, வீட்டுவசதி துறையில் இருந்து சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு, அறநிலைய துறைஅமைச்சர் சேகர்பாபுவிடம் தரப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

பால் கொள்முதல் விவகாரத்தில் எழுந்த சிக்கலை அமைச்சர் சா.மு.நாசர் சரியாக கையாளாதது, உதயநிதி, சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ ஆகியவற்றால், அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

நாசர் உள்ளிட்ட சில அமைச்சர்களை நீக்கிவிட்டு, அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், முதல்வர் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 9-ம் தேதி இரவு அறிவிப்பு வெளியானது. 

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 3-வது முறையாக மாற்றம் செய்யப்படுகிறது.

ஆளுநர் மாளிகையில் இன்று காலை10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் ரவியுடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். தொடர்ந்து, டிஆர்பி ராஜா தனக்கு ஒதுக்கப்படும் துறையின் அமைச்சராக பொறுப்பேற்பார்.

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்: புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்கும் நிலையில், 12 அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யவும் முதல்வர் முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset