நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகள் செய்வதும், ஆயக்குடி ஜமாத் சார்பில் எந்த எதிர்பார்புகளுமின்றி மருத்துவ முகாம் அமைத்து உதவுவதும் தமிழகத்தில் ஊறிக்கிடக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடு

இதையெல்லாம் நான் பேசாமல், எழுதாமல் வேறென்னத்தை எழுதி என்னாகப் போகிறது!

தமிழ்நாட்டின் தனிச் சிறப்பான தெய்வம் என்றால், அது முருகன் தான்.

தைபூசத்தையொட்டி விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு பாத யாத்திரையாகவே நடந்து சென்று வழிபடுவது தொன்றுதொட்டு நடந்து கொண்டுள்ளது. 

கிடைத்த உணவை உண்டு, கண்ட இடங்களில் படுத்தெழுந்து செல்லும் முருக பக்தர்களை தமிழ் நாட்டில் தங்கள் தென்னந்தோப்புகளிலும், பண்ணையிலும் ஓய்வெடுத்து குளித்து உடைமாற்றிச் செல்வதற்கு நிறைய இஸ்லாமியர்கள் உதவி வருகிறார்கள். அதே போல கிருஸ்துவர்களும் தங்கள் சர்ச்சை திறந்து வைத்து அந்த வளாகங்களில் முருக பக்தர்கள் தங்கிச் செல்ல உதவி வருகிறார்கள். 

இவை ஏதோ ஒன்றிரண்டு சம்பவங்களல்ல, பல இடங்களில் பல்லாண்டுகளாக நடந்து கொண்டுள்ளன.

அதுவும் குறிப்பாக பழனி அடுத்த ஆயக்குடி அருகே திண்டுக்கல் சாலையில் பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகள் செய்வதும், ஆயக்குடி காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் ஆயக்குடி ஜமாத் சார்பில் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி மருத்துவ முகாம் அமைத்து மருந்துகள், முதலுதவி சிகிச்சை தருவதும், நெடுந்தூரம் நடந்து வந்த வயதான பக்தர்களுக்கு கால் வலியைப் போக்கக்கூடிய மசாஜ் செய்துவிடுவதும் உள்ளபடியே நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னதச் செயல்களாகும். 

இந்த அன்பும், பாசமும்,பிணைப்பும் என்றென்றும் நீடித்து நிலைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இதை சிதையாமல் பேணி காக்க, முருக கடவுளே நீ எங்களுக்கு மனவலிமை தர வேண்டும்!

- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset