நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா?: விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி 

சென்னை: 

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகின்றனர். திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிரணியும் முக்கிய காரணம். திமுக ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால் இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது.

“கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப் பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதல்வராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை” என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசியது: “இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிற நாம், மீண்டும் ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும். அதற்கான களமாகத்தான் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

“ஆறு மாதம் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கும் மாதிரி இந்த ஆட்சி நடக்குமா?” என்று, ஏற்கெனவே நான் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசினேன். உடனே, அதை உண்மைக்கு மாறாகத் திரித்து, “ஆட்சியைக் கவிழ்க்க சதியா?” என்று கேட்டு நமது எதிரிகள் அழ ஆரம்பித்து விட்டார்கள்.

நான் ஏற்கெனவே நிறைய முறை சொல்லிவிட்டேன். இன்னொரு முறையும் இந்தக் கூட்டத்தில் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம்; கேள்விகளைப் கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகாலம் நடைபெற்ற நம்முடைய திராவிட மாடல் ஆட்சியே மகளிருக்கான ஆட்சிதான் என்பதைப் பற்றி, இங்கே எனக்கு முன்பு தலைமையேற்றுப் பேசிய கனிமொழி குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தான விடியல் பயணத்தில் தொடங்கி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என்று ஏராளமான புதுமையான திட்டங்களை நாம்தான் உருவாக்கினோம். அது மக்களுக்குச் சரியாகச் சென்றடைகிறதா என்று பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்தோம். அதுமட்டுமல்ல, இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட பெண்களுக்குத்தான் நிறைய வாக்குறுதிகள் நாம் கொடுத்தோம். குறிப்பாக, 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுக்கிற இல்லத்தரசி திட்டம், அதுமட்டுமா, உரிமைத்தொகை உயர்வு என்று நிறைய இருக்கின்றன.

ஆனால், இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று, நீங்களே சோஷியல் மீடியாவில் நிறைய வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் மூழ்கடிக்கிற மின்வெட்டு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்று நடந்த நாடகம் என்று இப்படிப் பலதரப்பட்ட மக்களும், “ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம்” என்று கோபமாக, ஆவேசமாக, வருந்திக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்டவர்களும் வருத்தப்படுகிறார்கள்; ஓட்டு போடாதவர்களும் வருத்தப்படுகிறார்கள். அதுதான் இப்போது இருக்கும் நிலை.

திமுக ஆட்சியில் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்துக் கொடுத்தோம். தவெக ஆட்சியில் நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. பாலியல் வன்முறை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு நடக்கும்போது விமர்சிக்காமல் இருக்க முடியுமா?.

நான் நிதிஆயோக் கூட்டத்துக்கு சென்றபோது ED வழக்கில் தப்பிக்க சென்றேன் என்றார் விஜய். பாஜகவை உறுதியாக விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என அமைதியாக இருக்கிறீர்களா?. நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், திமுக முன்வைத்த கோரிக்கைகளை பேசியுள்ளார் விஜய். இது சினிமா அல்ல, ஆட்சி நிர்வாகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset