நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் ஜெயாவில் அதிரடி நடவடிக்கை: 'ஷஃபிக்' கடத்தல் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மலேசிய குடிவரவுத் துறை

பெட்டாலிங் ஜெயா: 

மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக வங்காளதேச நாட்டவர்களைக் கடத்தி வந்த 'ஷஃபிக் கும்பல்' (Geng Shafik), குடிவரவுத் துறையினரின் அதிரடிச் சோதனையில் முறியடிக்கப்பட்டது. 

கடந்த செவ்வாய்க்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு கடையை மையமாகக் கொண்டு இயங்கிய ரகசியத் தங்குமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், ஒன்பது வங்காளதேச நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சட்டவிரோதக் கும்பல், தலா ஒரு நபருக்கு RM12,000 முதல் RM15,000 ரிங்கிட் வரை கட்டணமாகப் பெற்றுக்கொண்டு, அவர்களைக் கிளாந்தான் மாநிலத்தின் வழியாக நாட்டிற்குள் அழைத்து வந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வரும் இந்தக் கும்பல், இதுவரை சுமார் RM16 இலட்சம் ரிங்கிட் வரை லாபம் ஈட்டியுள்ளதாகக் குடிவரவுத் துறை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சோதனையின் போது கடத்தல் கும்பலுக்குத் துணையாகச் செயல்பட்ட, தங்குமிடத்தைப் பராமரித்த இரண்டு வங்காளதேச இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் அண்டை நாடு ஒன்றின் வழியாக இரண்டு நாட்களுக்கு முன்பே மலேசிய எல்லைக்குள் நுழைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 20 முதல் 49 வயதுடைய அனைவரும் தற்போது புத்ராஜெயா குடிவரவுத் துறை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 2007-ஆம் ஆண்டு மனிதக் கடத்தல், புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் (ATIPSOM) கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாட்டின் பாதுகாப்பைக் கருதி இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடிவரவுத் துறை எச்சரித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset