நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மரணத்திற்குப் பின்னும் தொடரும் வன்முறை: 29 வயது இளம் தொழிலதிபரின் தலை மாயமானதால் அதிர்ச்சி

மிலன்: 

இத்தாலியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொல்லப்பட்ட இளம் மாடல் அழகியும், தொழிலதிபருமான பமீலா ஜெனினியின் உடல் மீண்டும் சிதைக்கப்பட்ட செய்தி உலகையே உலுக்கியுள்ளது. 29 வயதான பமீலா, தனது வீட்டின் பால்கனியில் வைத்து முன்னாள் காதலனால் 24 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 52 வயதுடைய சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்த வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, புதைக்கப்பட்டிருந்த பமீலாவின் சடலத்திலிருந்து அவரது தலை துண்டிக்கப்பட்டுத் திருடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மயானத் தொழிலாளர்கள் வழக்கமான ஆய்வை மேற்கொண்டபோது, சவப்பெட்டியின் திருகுகள் தளர்வாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பெட்டியைத் திறந்து பார்த்தபோது, சுமார் ஐந்து மாதங்களாகப் புதைக்கப்பட்டிருந்த சடலத்தின் தலை காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.

மூன்று முதல் நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த இழிவான செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலிசார் சந்தேகிக்கின்றனர். உடலைச் சிதைத்தல், உடல் உறுப்புகளைத் திருடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தத் தலைத் திருட்டிற்கான பின்னணி, நோக்கம் குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

முன்னதாக, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பமீலா தனது நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததும், அதன் பின்னரே அவர் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட பின்னரும் ஒரு பெண்ணின் உடல் இவ்வாறு அவமதிக்கப்பட்டிருப்பது இத்தாலிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset