நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெற்ற பிள்ளைகளை குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைத்த தாய்: 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்

அவிக்னான்:

பிரான்ஸ் நாட்டின் அவிக்னான் நகரில், தான் பெற்றெடுத்த இரண்டு பச்சிளம் குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை வீட்டு குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்த 44 வயதுப் பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

2018, 2019-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த இந்தக் கொடூர மரணங்களுக்கு அந்தப் பெண்ணின் கவனக்குறைவும் திட்டமிட்ட அலட்சியமுமே காரணம் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விசாரணையின் போது, முதல் குழந்தை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகவும், பயத்தினால் அதன் உடலைக் குளிர்சாதன பெட்டியில் வைத்ததாகவும் அந்தப் பெண் வாதிட்டார். 

ஆனால், குழந்தையின் மண்டை ஓட்டில் இருந்த காயங்கள் கீழே விழுந்ததற்கான அடையாளங்கள் இல்லை என மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இரண்டாவது குழந்தையின் பிறப்பின் போது தனக்கு நினைவு தப்பியதாகவும், பின்னர் பயத்தில் அந்த உடலையும் குளிர்சாதன பெட்டியில் வைத்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், குழந்தைகளைப் பராமரிக்கத் தவறியதே அவர்களின் மரணத்திற்கு இட்டுச் சென்றதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தண்டனைப் பெற்ற அந்தப் பெண், ஏற்கனவே உள்ள தனது மூன்று மகள்களையும் வன்முறையான முறையில் நடத்தியது விசாரணையில் அம்பலமானது. 

பிரான்சில் இது போன்ற பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2015, 2018-ஆம் ஆண்டுகளில் இதே போன்ற குற்றங்களுக்காக வேறு சில பெண்களுக்குச் சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த 25 ஆண்டு காலச் சிறை தண்டனை, குழந்தைகளுக்கு எதிரான இழைக்கப்படும் கொடுமைகளுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பெண்மணி குழந்தைகளைக் கொல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset