நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"நீர் திவால் நிலையில் மலேசியா இல்லை": துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் அறிவிப்பு

கூச்சிங்:

மலேசியா 'நீர் திவால்' (Water Bankruptcy) நிலையை அடையும் அபாயத்தில் இல்லை என்றும், நாட்டிடம் போதுமான அளவு நீர் ஆதாரங்கள் இருப்பதாகவும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 2,500 மில்லிமீட்டர் மழை பொழிவதையும், 580 பில்லியன் கன மீட்டர் புதுப்பிக்கத்தக்க நீர் ஆதாரம் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சவால் நீர் பற்றாக்குறை அல்ல, மாறாக நீர் ஆதாரங்களை முறையாக நிர்வகிப்பதும் பாதுகாப்பதுமே ஆகும் என்றார். குறிப்பாக, ஆறுகளின் தூய்மையைப் பாதுகாப்பதும், விநியோக முறையை மேம்படுத்துவதுமே தற்போதைய உடனடித் தேவையாக உள்ளது.

நாட்டின் நீர் விநியோகத்தில் 'வருவாய் ஈட்டாத நீர்' (NRW) இழப்பு 34.3 சதவீதமாக இருப்பது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது நாள் ஒன்றுக்குச் சுமார் 6,000 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் வீணாவதற்குச் சமமாகும். 

இந்த இழப்பை 25 சதவீதமாகக் குறைக்க முடிந்தால், புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காமலேயே நாள் ஒன்றுக்கு 2,000 மில்லியன் லிட்டர் கூடுதல் நீரைச் சேமிக்க முடியும். வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நீர் தேவை 25,000 மில்லியன் லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், நிலத்தடி நீர், மழைநீர் சேகரிப்பு போன்ற மாற்று வழிகளை ஒருங்கிணைப்பது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மலேசியர்களின் அன்றாட நீர் பயன்பாடு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த 165 லிட்டரை விட அதிகமாக, அதாவது 225 லிட்டராக உள்ளது. நீர் வளத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

முறையான நீர் மேலாண்மை மாற்றங்கள் இல்லாவிடில், 2030-ஆம் ஆண்டில் சில பகுதிகளில் நீர் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைத் திட்டத்தின் (IWRM) மூலம் மலேசியாவை 2040-க்குள் நீர் துறையில் ஒரு சிறந்த மையமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் துணைப் பிரதமர் ஜகார்த்தாவில் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset