நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை: வானிலை மையம்

சென்னை: 

மலாக்கா அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்று இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது. இலங்கை அருகே இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 29, 30-ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்றது. பிறகு, தென்மேற்காக நகர்ந்து, இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று (நவ.27) வடமேற்காக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 

அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை (நவ.28) கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பரவலாக டிச.2-ஆம் தேதி வரை மழை நீடிக்கும்.

இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும்.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

29-ஆம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

30-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.1-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 29-ஆம் தேதி வரை மணிக்கு அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset