நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநாட்டுக்கு வரும்படி வீடுவீடாக சென்று அழைப்புவிடுக்கும் சீமானின் தாயார்

சிவகங்கை:

திருச்சியில் பிப்.21-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற இருக்கிறது.

அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாள் தனது சொந்த ஊரில் வீடு, வீடாகச் சென்று வெற்றிலை, பாக்குடன் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்து வருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக-வை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டுமென நாதக-வினர் முனைப்புக் காட்டுகின்றனர். 

இந்த நிலையில், பிப்.21-ம் தேதி திருச்சியில் `மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது நாதக.

இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். 

இந்த நிலையில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள நாதக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை மாநாட்டுக்கு அழைத்து வருகின்றனர். 

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரில் அவரது தாயார் அன்னம்மாள் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்குடன் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த அழைப்பின் போது, “கண்டிப்பாக அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம். தயாராக இருந்தால் போதும்” என்று கிராமத்து பாணியில் பேசி வருகிறார் அன்னம்மாள். 

அவருடன் மாநில கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர் தங்கராஜ், கிழக்கு மண்டலச் செயலாளர் திசைக்கர்ணன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ், விஷ்ணு, வடக்கு மாவட்டத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset