செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
சேலம்:
பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். யார் துரோகம் செய்தாலும் கட்சித் தலைமை வேடிக்கை பார்க்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்ததற்காக விவசாயிகள் சார்பில் எனக்கு பாராட்டு விழா நடத்தினர். இந்த திட்டத்தால் செங்கோட்டையனின் கோபி தொகுதியும் பயனடையும் நிலையில்கூட, விழா பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்று கூறி, அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
ஆனால், அவரது தொகுதியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மட்டுமே இருந்த நிலையிலும் அதில் அவர் கலந்து கொண்டார். திமுகவின் ‘பி’ டீம் வேலையை அப்போதே பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அவர் கூறுவது சரியான கருத்து அல்ல. அவர் கூறுபவர்கள் எல்லோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அவருடன் கட்சியினர் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக, கட்சி விரோதநடவடிக்கையில் ஈடுபட்டதால், சட்டவிதிகளின்படி செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் அவரை ஜெயலலிதா நீக்கினார். ஆனால், நான் முதல்வரானபோது, அவருக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட்டது.
ஜெயலலிதா கடந்த 2011-ல் ஒழுங்குநடவடிக்கை எடுத்து டிடிவி. தினகரனை கட்சியில் இருந்து நீக்கினார். ஜெயலலிதா மறைந்த பிறகே, தினகரனுக்கு துணைப்பொதுச் செயலாளர் பதவியை சசிகலா வழங்கினார். சட்டப்பேரவையிலோ, பொதுக்கூட்டத்திலோ செங்கோட்டையன் திமுகவை எதிர்த்து பேசியது கிடையாது. அவர் திமுகவின் ‘பி டீம்’ என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
யார் விரோதமாக செயல்பட்டாலும், துரோகம் செய்தாலும் கட்சித் தலைமை வேடிக்கை பார்க்காது.
ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து வெளியே அழைத்துச் சென்றவர் தினகரன். அவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். நாங்கள் அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கொடுத்தோம். ஆனாலும், அவர், எதிராகவே செயல்பட்டார்.
அதிமுக அலுவலகத்தை ஆட்களை வைத்து அடித்து நொறுக்கினார். இப்படிப்பட்டவர்கள் கட்சிக்கு உண்மையாக இருப்பார்களா? பதவி இல்லை என்றால் எந்த எல்லை வரையும் செல்வார்கள்.
திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என 4 நாட்களுக்கு முன்பு கூறினார். அதிமுக ஆட்சி வர வேண்டும் என இவர்கள் நினைக்கவில்லை. மறைமுகமாக ஆதரித்து, திமுக ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள்.
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ‘பி டீம்’ ஆக செயல்படுவதுதான் திட்டம். சசிகலா பற்றி சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் பதிவு செய்ததை பாருங்கள்.
மருத்துவமனையில் அம்மா இருந்தபோது, சசிகலா பேசாதது ஏன்? குற்றவாளி சசிகலா.. தப்பியது தமிழகம்.. சசிகலா உள்ளிட்ட மூவர் உடனே சரணடைய உத்தரவு..’ இதெல்லாம் வலைதளங்களில் ஓபிஎஸ் பதிவு செய்தவை. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
February 14, 2026, 9:44 am
