நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது

சென்னை: 

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதன்பிறகு, எந்த விதமான பிரச்சாரத்துக்கும் அனுமதி இல்லை.

தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
 
தமிழகத்தை பொருத்தவரை 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வரும் 19-ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 39 மக்களவை தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுவதால், தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, பாஜக சார்பில் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset