செய்திகள் தமிழ் தொடர்புகள்
நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை; சரியாக வளர்த்திருந்தால் என் மார்பில், முதுகில் குத்தியிருக்கமாட்டார்: கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்
சேலம்:
சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச. 29) காலை நடைபெற்றது. இதில் பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் கூட்டணி முடிவு, வேட்பாளர்கள் தேர்வுக்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் என 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
கூட்டத்தில் ஒவ்வொருவராக பேசிய நிலையில் இறுதியாக பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் பேசத் தொடங்கினார்.
பேச்சின் தொடக்கத்திலேயே அன்புமணி பற்றி பேசியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார். அருகில் இருந்த அவரது மகள் ஸ்ரீகாந்தி, ராமதாஸை தேற்றினார்.
ஒருநாள் தன்னுடைய தாய் கனவில் வந்ததாகவும் அப்போது அன்புமணி குறித்து பேசியதாகவும் கூறிய ராமதாஸ், அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை என்று தன்னுடைய தாய் கூறியதாகத் தெரிவித்தார். தானும் அதை ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
அப்போதுதான் அவர் கண்ணீர் விட்டு அழுத நிலையில், 'அழ வேண்டாம்' என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.
கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசிய ராமதாஸ்,
"நான் வளர்த்த பிள்ளைகள், நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள் என்னை மிகவும் மோசமாகத் தூற்றுகிறார்கள்.
நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை. அப்படி சரியாக வளர்த்திருந்தால் என்னை மார்பில், முதுகில் குத்தியிருக்கமாட்டார். அவருக்கு ஒரு குறையும் நான் வைக்கவில்லை. மற்ற தகப்பனைவிட அதிகமாக அவருக்குச் செய்திருக்கிறேன். சில்லறை பையன்களை வைத்துக்கொண்டு என்னை அவமானப்படுத்துகிறார்.
30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த ஜி.கே. மணியை அன்புமணி அவமானப்படுத்தினார். தொடர்ந்து என்னையும் நேரடியாக தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அன்புமணி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என என்னுடைய மருத்துவர்களே கேட்கின்றனர்.
இரவில் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. அன்புமணி செய்தது ஞாபகம் வந்துவிடுகிறது. ஆனால் என்னுடைய மக்களை நினைக்கும்போது ஆறுதலாக இருக்கிறது. இதுபோன்று ஒரு தகப்பன் உலகில் யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார்
100க்கு 95% மக்கள் என்னுடன்தான் இருக்கின்றனர். அன்புமணியிடம் 5% மக்கள்கூட இல்லை. இந்த தேர்தலில் அவருக்கு சரியான பதிலடி கிடைக்கும்" என்று பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 7:19 am
புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா: கட்சிக் கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
