நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: 

தமிழகத்தில் நாளை முதல் ஜன.3-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக நாளை (டிச.29) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

டிச.30 முதல் ஜன.1-ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

ஜன.2, 3 தேதிகளில் தமிழகத்தில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச குளிர் நிலை  நாளை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். 

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குளிர் அளவுகளின்படி அதிகபட்சமாக சமவெளிப் பகுதியான திருத்தணியில் 17.6 டிகிரி, மலைப்பகுதியான ஊட்டியில் 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு சென்னை வானிலை மையம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset